Thursday 30 January 2014

‘அஞ்சான்’ ஆகஸ்ட் 15-ந்தில் வருகிறான்!

சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கி, தயாரிக்கும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். மேலும் இந்தி நடிகர்கள் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பல் யாதவ், திலீப் தஹில் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார்.

தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகி வரும் இப்படத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி சுதந்திர தினத்தன்று வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கான வேலைகளில் மும்முரமாக களமிறங்கியுள்ளனர் படக்குழுவினர்.

இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு மும்பையில் தொடங்கியது. அடுத்தகட்டமாக கோவா, மகாராஷ்டிரா மற்றும் தமிழ்த்திரை காணாத பல இடங்களிலும் படமாக்க உள்ளனர். தமிழ்நாடு தவிர மற்ற இடங்களில் முழு படத்தின் படப்பிடிப்பை நடத்தத் முடிவு செய்துள்ளனர். இப்படத்தில் இந்தி நடிகை சோனாக்சி சின்ஹா குத்துப்பாடல் ஒன்றுக்கு சூர்யாவுடன் நடனம் ஆடுகிறார். இப்படத்திற்காக ரெட் டிராகன் என்ற அதிநவீன கேமிரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக ரெட் டிராகன் கேமராவை பயன்படுத்தி எடுக்கப்படும் முதல் படம் என்ற பெயரை இப்படம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

‘கோலி சோடா’ - 2–ம் பாகம் தயார்!

‘கோலி சோடா’ சினிமா தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் பசங்க திரைப்படத்தில் நடித்த கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

கோலி சோடா படம் ஈரோட்டில் ஸ்ரீனிவாசா, ஆனூர், அபிராமி தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ளது.

கோலி சோடா படத்தில் நடித்த நடிகர் குழுவினர் நேற்று இரவு ஸ்ரீனிவாசா, ஆனூர் அபிராமி திரையரங்குகளில் ரசிகர்களை நேரில் சந்தித்தனர்.

நடிகர்கள் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ் ஆகியோருடன் நடிகைகள் சாந்தினி, சீதா மற்றும் பட டைரக்டர் விஜய்மில்டன், சண்டை பயிற்சியாளர் சுப்ரீம் சுந்தர் ஆகியோரும் ரசிகர்களை சந்தித்தனர்.

நடிகர்களை பார்த்ததும் படம் பார்த்து கொண்டிருந்த ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்றனர். அவர்களுக்கு நடிகர்கள் நன்றி தெரிவித்தனர். ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர்கள் பதில் அளித்தனர்.

டைரக்டர் விஜய்மில்டன் பேசும் போது, ‘‘இதே நடிகர் குழுவினரை வைத்து கோலி சோடா படத்தின் 2–ம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளேன். இந்த நடிகர்களை எனது கதைக்கு தேர்வு செய்த இயக்குனர் பாண்டிராஜ்–க்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்’’ என்றார்.

முன்னதாக அபிராமி தியேட்டருக்கு வந்த நடிகர்கள் மற்றும் படக்குழுவினரை தியேட்டர் மேலாளர் பாலு தலைமையில் இதயம் நற்பணி இயக்கம் அறக்கட்டளை தலைவர் எஸ்.வி.மகாதேவன் மற்றும் திரையரங்க ஊழியர்கள் வரவேற்றனர்.

இதேபோல் ஸ்ரீனிவாசா தியேட்டர் சிவக்குமார், விஜயன், மற்றும் ஆனூர் தியேட்டர் ராமசாமி ஆகியோரும் வரவேற்றனர். 

பார்வதி ஓமனக்குட்டன்! இந்தி பீட்சா நாயகி!

உலக அழகிப்போட்டியில் இரண்டாம் இடம் பிடித்த பார்வதி ஓமனக்குட்டன் இந்திய சினிமாவில் முதல் இடம்பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார். தமிழில் பெரும் எதிர்பார்ப்போடு பில்லா-2வில் நடித்தார். பில்லா-2 பிளாப் ஆகவே பார்வதியின் கனவு கலைந்தது. இப்போது பேஷன் ஷோக்கள், நடன நிகழ்ச்சிகள் என்று உலகம் முழுவதும் சுற்றிக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழில் ஹிட்டடித்த பீட்சாவின் இந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: நான் எதையும் தேடிப்போவதில்லை. கிடைக்கிற வாய்ப்புகளை முழு மனநிறைவோடு செய்கிறேன். இப்போது உலகம் முழுவதும் பேஷன் ஷோக்களுக்கு போய் வருகிறேன். ரசிகர்களை நேரடியாக சந்தோஷப்படுத்தி பார்க்கிற அனுபவம் அது. உலக நாடுகளையும் சுற்றிப் பார்க்கலாம்.

தமிழ் படங்களில் வாய்ப்புகள் அமையாதது வருத்தம்தான். ஆனாலும் பில்லா-2 எனக்கு ரொம்ப பிடித்த படம். ஸ்ரீகாந்த் நடிக்கும் நம்பியார் படத்தில் நானும் ஆர்யாவும் இணைந்து கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறோம். அடுத்து பீட்சா இந்தி ரீமேக்கில் நடிக்கிறேன். விரைவில் தமிழ் படத்தில் நடிப்பேன் என்கிறார் பார்வதி.

இது நம்ம ஆளு - சிம்பு - நயன்தாராவின் புதிய படம்!

சிம்புவும், நயன்தாராவும் இணைந்து நடிக்கும் படத்தை பசங்க பாண்டிராஜ் டைரக்ட் செய்து வருகிறார். சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் படத்தை தயாரிக்கிறார். சிம்புவின் தம்பி குறளரசன் இசை அமைக்கிறார். சிம்புவின் குடும்ப படத்தில் நயன்தாரா நடிப்பது பற்றி பரபரப்பான பேச்சு நிலவி வருகிறது. இந்த நிலையில் இப்போது படத்துக்கு இது நம்ம ஆளு என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள்.

இதுபற்றி படத்தின் டைரக்டர் பாண்டிராஜ் கூறியிருப்பதாவது: இந்தப் படத்திற்கு முதலில் கதவை திற காதல் வரட்டும், லவ்வுன்னா லவ்வு அப்படியொரு லவ்வு இந்த இரண்டு தலைப்பில் ஒன்றைத்தான் வைக்க முடிவு பண்ணியிருந்தேன். ஆனால் படத்துல நயன்தாரா நடிக்கிறதுன்னு முடிவானதும் இதைவிட பெட்டரா ஒரு தலைப்பு வைக்கணும்னு தீவிரமா யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதான் அதுக்கான ஐடியா கிளிக் ஆச்சுது. சிம்பு ஒவ்வொருமுறையும் நயன்தராவை பார்க்குறப்போ "இது நம்ம ஆளு சார்"னு ஃபீல் பண்ணுற மாதிரி படத்துல நிறைய காட்சிகள் இருக்கு. அதையே படத்துக்கு டைட்டிலா வச்சிட்டா என்ன என்று யோசித்தேன். அதுதான் டைட்டில் இது நம்ம ஆளு.

சிம்புவுக்கு ஒரு லவ் பெயிலியராயிடும். கல்யாணமே வேண்டாமுன்னு சொல்லிக்கிட்டிருப்பாரு. அவருக்கு நயன்தாராவை நிச்சயம் பண்ணிடுறாங்க. கல்யாணத்துக்கு 6 மாசம் இருக்கிற நிலையில இருவரும் ஒருவரை ஒருவர் எப்படி புரிஞ்சுக்கிட்டு லவ் பண்றாங்க கல்யாணத்துக்கு பிறகு என்னென்ன பிரச்னைகள் வருதுங்கறதுதான் படத்தோட கதை.

சிம்புவும் சரி, நயன்தாராவும் சரி எந்த பிளாஷ்பேக்குக்கும் போகாமல் அவுங்கவுங்க கேரக்டரை அழகா நடிச்சிடுறாங்க. சூட்டிங் ஸ்பாட்டுல நல்ல பிரண்ட்லியா பழகிக்கிறாங்க. சில காட்சிகள் அவுங்களோட பழைய நினைவுகளை கிளர்ற மாதிரி இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே சின்சியராக நடிச்சுடுறாங்க. சில காட்சிகள்ல எப்படி நடிக்கிறதுன்னு கேட்பாங்க. அதான் நிறைய பண்ணியிருக்கீங்களே அதையே பண்ணிடுங்கன்னு சொல்வேன். சிரிச்சிக்கிட்ட நடிச்சு கொடுத்துடுவாங்க என்கிறார் பாண்டிராஜ்.

ஸ்ருதி ஹாசன் எதிர்ப்பு! டி.டே இந்திப் படம் தமிழில் வெளியாகாது..?

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி பரபரப்பை கிளப்பிய படம் டி டே. ஸ்ருதிஹாசன் இதில் பாலியல் தொழிலாளியாக துணிச்சலுடன் நடித்திருந்தார். படத்தில் அவர் நடித்த காட்சிகளும், போட்டோக்களும் அதிர வைத்தது. ஸ்ருதியுடன் அர்ஜுன் ரம்பால், இர்பான் கான், ரிஷி கபூர், சந்தீப் குல்கர்னி, ஹியூமா குரேசி ஆகியோர் நடித்திருந்தனர். சங்கர் இஷான் லாய் இசை அமைத்திருந்தார். நிகில் அத்வானி டைரக்ட் செய்திருந்தார். இப்போது இந்தப் படத்தை தமிழில் தாவூத் என்ற பெயரில் டப் செய்து வெளியிட இருக்கிறார்கள்.

இதற்கு ஸ்ருதி ஹாசன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "இந்தியில் நான் நடித்த டி.டே படம் தமிழில் தாவூத் என்ற பெயரில் வெளியிடப்பட இருப்பதாக அறிகிறேன். இதற்கு என் அனுமதியை பெறவில்லை. என்னிடம் தகவலும் சொல்லவில்லை. இது ஒப்பந்தததை மீறுவதாகும். இதுகுறித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன். இதற்கான ஏற்பாடுகளை இப்போது செய்து வருகிறேன். அதுபற்றி விரிவாக பின்னர் சொல்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.

தமிழ் நாட்டில் கமலஹாசன் மகள், குடும்பபாங்கான நடிகை என்ற நல்ல பெயர் ஸ்ருதிக்கு இருக்கிறது. இந்தப் படம் வந்தால் அந்த இமேஜ் மாறும் என்பதால் படம் தமிழில் வெளிவருவதை ஸ்ருதி விரும்பவில்லை என்கிறார்கள்.