Saturday 8 March 2014

புரட்சிகரமான கதை -வசனம்: பரபரப்பை உண்டாக்கிய 'அரங்கேற்றம்'

புரட்சிகரமான கதையைக் கொண்ட 'அரங்கேற்றம்' படத்தின் மூலம், பாலசந்தர் பெரும் பரபரப்பை உண்டாக்கினார்.

1972-ல் 'வெள்ளி விழா' படம் வாகினி ஸ்டூடியோவில் படமாகிக் கொண்டிருந்த சமயத்தில், பாலசந்தருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. அதனால் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு காரில் புறப்பட்டார்.

அதன்பின் நடந்தது பற்றி பாலசந்தர் கூறுகிறார்:-

'ஜெமினி அருகே கார் நின்றது. தனிமையில் இருந்த நான், என் கடந்த காலத்தைப் பற்றி நினைத்தேன். அப்போது, 'கண்ணா நலமா' பேனர் கண்ணில் பட்டது. `இத்தனை ஆண்டுகள் கலைத்துறையில் இருந்து என்ன சாதித்து விட்டோம்' என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன்.

இதற்குக் கிடைத்த பதில் `ஒன்றுமில்லை' என்பதுதான். `இதுவரை ஒன்றும் சாதிக்கவில்லை. ஏதும் சாதிக்காமலேயே போய்விடுவோமா?' என்று எண்ணியபோது, கண்களில் நீர்த்துளிகள் மல்கின.

கார் நகரத் தொடங்கியது. என் சிந்தனைகளும் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அப்போது, கதீட்ரல் ரோட்டில் என் கார் ஊர்ந்து கொண்டிருந்தது. ஒரு பக்கத்தில் இருந்த 'புன்னகை' பேனர்களைப் பார்த்தேன். சிறிது ஆறுதல். `ஏதும் செய்யாமல் இல்லை. ஏதோ நம்மால் முடிந்ததைச் செய்துதான் இருக்கிறோம்' என்று எனக்கு நானே ஆறுதல் கூறிக்கொண்டேன். என் மனச்சுமை சிறிது இறங்கியது போல் இருந்தது.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுத் திரும்பிய எனக்கு புதிய வேகமும், தெம்பும், தன்னம்பிக்கையும் ஏற்பட்டன. `எதையாவது புதுமையாகச் செய்யவேண்டும். அதன் மூலம் சினிமா துறையில் நான் நின்றாலும் சரி, வீழ்ந்தாலும் சரி' என்று முடிவு எடுத்தேன்.

'வெள்ளி விழா' படத்தை முடித்து திரையிட்டவுடன், அரங்கேற்றம் படத்தை எடுத்தேன்.'

இவ்வாறு பாலசந்தர் கூறினார்.

பாலசந்தரின் திரை உலக வாழ்க்கையில், 'தெய்வத்தாய்' முதல் 'வெள்ளி விழா' வரை முதல் பாகம். இரண்டாம் பாகம் 'அரங்கேற்ற'த்தில் தொடங்குகிறது.

இதை இரண்டாம் பாகம் என்று குறிப்பிடுவதற்குக் காரணம் இருக்கிறது. 'ஒரு நல்ல படத்தைத் தயாரிக்க வேண்டும்' என்பதே, இதற்குமுன் பாலசந்தரின் நோக்கமாக இருந்தது. ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்றபோது, தான் அதுவரை நடந்து வந்த பாதையையும், தன் படைப்புகள் பற்றியும் சிந்தித்துப் பார்க்க அவகாசம் கிடைத்தது.

'இனி நல்ல படங்களை எடுத்தால் மட்டும் போதாது. சமுதாயத்துக்கு உதவக்கூடிய கருத்துக்களை எடுத்துக் கூறும் படங்களை தயாரிக்க வேண்டும். பிறர் தொடத்தயங்கும் கதைகளை துணிந்து படமாக்க வேண்டும்' என்று முடிவு எடுத்தார். அதன் தொடக்கமே 'அரங்கேற்றம்.'

வறுமையினாலும், சந்தர்ப்ப சூழ்நிலையினாலும் வழி தவறிச் செல்லும் ஒரு பெண்ணைச் சுற்றிச் சுழலும் கதை. வழுக்கி விழுந்த பெண்ணாக பிரமிளா நடித்தார். அவருக்கு வாழ்வு கொடுக்க முன்வரும் இளைஞனாக சிவகுமார் நடித்தார்.

'களத்தூர் கண்ணம்மா'வில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமலஹாசன், வாலிபனாக இப்படத்தில் முதன் முதலாகத் தோன்றினார். 'கலாகேந்திரா' தயாரிப்பான `அரங்கேற்றம்' 1973-ல் வெளிவந்தது.

இந்தப்படம் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கதையை சில பத்திரிகைகள் பாராட்டின; சில பத்திரிகைகள் தாக்கின. படம் பார்த்த பலர் படத்தை ஓகோ என்று புகழ்ந்தனர்; சிலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

கதாநாயகி ஒரு பிராமணப் பெண்ணாக சித்தரிக்கப்பட்டிருந்ததால், பிராமணர் சங்கங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன.

இதுபற்றி பாலசந்தர் கூறியதாவது:-

'சூழ்நிலை காரணமான தவறான பாதைக்குப் போனவர்கள் எந்த ஜாதியிலும் இல்லாமல் இல்லை.

இந்தப் படத்தைப் பொறுத்தவரை, வறுமையின் எல்லையை படம் பிடித்துக்காட்ட விரும்பினேன். அதற்கு வைதீக பிராமணக் குடும்பம் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து அதை கருவாகக் கொண்டு, கற்பனையில் கதையை உருவாக்கினேன்.

திரைப்படத்துறை ஒரு தொழில்தான். மறுக்கவில்லை. ஆனால் அது கலப்படம் இல்லாமல் இருக்கவேண்டும்.

ஏதேனும் ஒரு விஷயத்தை சொல்லியே ஆகவேண்டும் என்ற ஆர்வத்தின் அடிப்படையில் திரைப்படங்கள் அமையும்போதுதான், திரைப்படத் தொழில் சமுதாயத்திற்கு தான் செய்ய வேண்டிய கடமையைச் செய்து முடித்ததாக கருதமுடியும்.

ஏற்கனவே சில திரைப்படங்களில் ஆங்காங்கே `குடும்பக் கட்டுப்பாடு' மென்மையாக வலியுறுத்தப்பட்டு இருந்தது. என்றாலும், முழுத் திரைக்கதை அமைப்பிலும் குடும்பக் கட்டுப்பாடு வலியுறுத்தப்பட்டு இருக்கிறதா என்று யோசித்துப் பார்த்தால், `இல்லை' என்ற பதில்தான் என் நினைவுக்கு எட்டியவரை தோன்றியது.

எனவே, அரங்கேற்றத்தின் மூலக் கருத்தாக அதை வைத்தேன்.

எந்த ஒரு விஷயத்தை மேலெழுந்த வாரியாகவும் சொல்ல முடியும். ஆனால் அரங்கேற்றம் கதையைப் பொறுத்தவரை மேலெழுந்த வாரியாகச் சொல்ல நான் விரும்பவில்லை.

கற்பனையை விட உண்மை சில நேரங்களில் விசித்திரமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். ஏன், பயங்கரமான உண்மைகளும் உண்டு. சில உண்மைகளைச் சொல்வதற்கு நாம் அஞ்சுகிறோம். ஆனால் அரங்கேற்றத்தில் அதைச் சொல்ல நான் அஞ்சவில்லை.'

இவ்வாறு பாலசந்தர் கூறியுள்ளார்.

'அரங்கேற்றம்' படத்தின் கதை பற்றி வாதப் பிரதிவாதங்களும், பட்டிமன்றங்களும் ஒரு புறம் நடந்து கொண்டிருந்தாலும், படம் மக்கள் ஆதரவுடன் வெற்றிநடைபோட்டது.

தமிழ்த்திரை உலக வரலாற்றில் 'அரங்கேற்றம்' ஒரு மைல்கல் என்றால் அது மிகையல்ல.

ஆட்டத்திலும் குறியீடு பாஸ்! இங்கே பாருங்க பாஸ்!

நம்ம சினிமாவில் ஹீரோக்கள் தொடங்கி இயக்குநர்கள் வரைக்கும் யார் யாரோ என்னென்னமோ குறியீடெல்லாம் காட்டிட்டுப் போறாங்க. ஆனா, நம்ம டான்ஸ் மாஸ்டர்ஸ் பல படங்கள்ல மிக முக்கியமான விஷயங்களை எல்லாம் குறியீடாக் காட்டிட்டுப் போறாங்க. அதையெல்லாம் நாம என்னைக்குத்தான் கவனிச்சிருக்கோம். சரி அப்படி என்னதான் காட்டுறாங்கனு சில சாம்பிள்ஸ் பார்ப்போம் வாங்க...


'சரோஜா’ படத்துல 'கோடானகோடி’ னு ஒரு பாட்டு. அதில் பார்த்தீங்கனா, டான்ஸ் ஆடற எல்லோரும் ரெண்டு கையையும் எடுத்து முன்னாலேயும் பின்னாலேயும் துடைச்சிக்கிற மாதிரியான ஒரு ஸ்டெப். சாதாரணமாப் பாத்தா அது நமக்குப் புரியாது. ஆனா அதில் சொல்ல வருகிற மேட்டரே வேற... நாட்டில்  குடிநீர்ப் பஞ்சம் தலை விரித்தாடுகிறது. வருங்காலத்தில் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவக்கூட தண்ணீர் இல்லாத நிலை ஏற்படலாம். எனவே அதற்கான முன் நடவடிக்கைகளை எல்லாம் நாம் எடுத்தாக வேண்டும் என்பதைத்தான் சிம்பாலிக்காகச் சொல்லியிருக்கிறார்கள்.




'சூது கவ்வும்' படத்தில் 'காசு பணம் துட்டு மணி’ பாடலின் ஒட்டுமொத்த நடன அமைப்பும் தவறான வழியில் பணம் சேர்த்துவைத்திருக்கும் இன்றைய பணக்கார வர்க்கத்தின் ஆணவத்தையும், தகிடுதத்தங்களையும், திடீர் ஆடம்பரங்களையும் அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறார்கள் நம்ம நடன இயக்குநர்கள்.


கடைசியாக 'மங்காத்தா’ படத்தில் வரும் 'விளையாடு மங்காத்தா’ பாடலில் டான்ஸ் மாஸ்டர் பஜ்ஜிக்கு வாழைக்காய் சீவுவதைப் போல் அஜித்துக்கு ஒரு ஸ்டெப் கொடுத்திருப்பார். இது எதைக் காட்டுகிறது என்றால், ஆணும் பெண்ணும் சரிசமமாக வேலைக்குச் செல்லும் வளர்ந்துவிட்ட சமூகத்தில் வாழும் நாம் ஆண் குழந்தைகளுக்கும் சமையலைக் கற்றுக்கொடுக்க வேண்டும், அப்போதுதான் குடும்ப சுமையைப் பங்கிட்டுக்கொள்ளலாம் என்ற மிக மிக முக்கியமான விஷயத்தை மேம்போக்காகக் காட்டிவிட்டுச் சென்றிருக்கிறார்.




இதையெல்லாம் படிச்சிட்டு ஏன்யா இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்குனு உங்க மைண்ட் வாய்ஸ்ல ஓடுறது கேட்குது. அடுத்த தடவை இந்தப் பாட்டையெல்லாம் பாக்கும்போது அட, ஒருவேளை உண்மையாதான் இருக்குமோனு உங்களுக்கே மண்டையில் பல்பு எரியும் பாருங்களேன்!

டைட்டானிக்கில் அலைகள் ஓய்வதில்லை! பாரதிராஜா ஹாலிவுட் படம்!

பாரதிராஜா ஹாலிவுட் படம் எடுக்கப்போறார்னு செய்தி வந்ததுக்கு அப்புறம் எனக்கு ரெண்டு பிறந்தநாள் வந்துட்டுப் போயிடுச்சு. அதுதான் 'டைட்டானிக்’ படத்தை பாரதிராஜா ரீமேக் பண்ணினா எப்படி இருக்கும்னு நானே ஒரு கற்பனைப் படம் ஓட்டிப் பார்த்தேன். ஃபாலோ மீ.

அந்தக் கரகர குரலின் அறிமுகத்துடன் ஆரம்பிப்போமா?

என் இனிய தமிழ் மக்களே, உங்கள் பாசத்துக்குரிய பாரதிராஜா மீண்டும் ஒரு காதல் காவியத்தோடு வருகிறேன். இந்த முறை உங்களுக்குக் கடல் வாசனையை அறிமுகம் செய்யப்போகிறது இந்த கிராமத்துக் குயில். வாருங்கள் இந்தக் கடல் கரைத்த கண்ணீர்க் கவிதையைக் காதலால்  வாசிப்போம்.

மாயனுக்கும் (மனோஜ்), ரோசாவுக்கும் நிச்சயம் முடிஞ்சுது. அவங்க கல்யாணத்துக்காக ரோசாவோட அப்பனும் சின்னாத்தாளும் மூட்டை முடிச்செல்லாம் கட்டிக்கிட்டு குலதெய்வக் கோயிலுக்கு கப்பல்ல (அட குலதெய்வக் கோயிலு மலேசியா முருகன் கோயிலுப்பு!) போறாக. மாட்டுவண்டியில் வந்து இறங்கி கப்பல்ல ஏறுது ரோசாவோட  குடும்பம். அப்படியே பிளாட்ஃபாரத்துல இருக்கிற முறுக்கு, அதிரசக் கடை, சாராயக் கடை, பீடிக் கடை எல்லாத்தையும் காட்டிட்டு ஹீரோ இருக்கிற இடத்தை நோக்கி கேமரா போகுது. அங்கே ஆடு, மாட்டைப் பேரம் பேசிட்டிருக்காரே... அதான் நம்ப ஹீரோ விருமண்.


ஆட்டை வித்தக் காசுல அமெரிக்காவுக்கு டிக்கெட் வாங்கிட்டு கப்பல் நோக்கிப் போறான். கப்பல்ல அவனுடைய பக்கத்து ரூம்ல இருக்கிற ரோசாவைப் பாத்ததும் தந்தனன தந்தனானானு வெள்ளை டிரெஸ் போட்டுட்டு அவளைச் சுத்தி நாலைஞ்சு பொண்ணுக பாடுற மாதிரி தெரியுது. அட புரியலையா... தட் இஸ் லவ்!


அடுத்த நாள் காலையில் அவங்க அப்பா காபித்தண்ணி குடிக்க, சின்னாத்தா வெத்தலை போட, மாமன் மாயன் சீட்டாடப் போனதுக்கப்புறம் அவளைப் பார்த்துக் காதலைச் சொல்றான் விருமண். ஆனா, அவளுக்கு நிச்சயமாயிடுச்சுனு சொன்னதும் பயலுக்கு மனசொடிஞ்சு போய்டுது. மறுநா காலையில அவ மாமன் அவளுக்குத் தங்கத்துல தந்தட்டி வாங்கித் தர்றான். அதைப் பல்ல இளிச்சிக்கிட்டே வாங்குறா. அதை அப்பா கருத்தமாயிகிட்ட காட்டப் போகும் வழியில் மாமா வேற ஒருத்தியைக் கொஞ்சுறதைப் பார்க்கிறா. அவுக சின்னாத்தாகிட்ட சொல்லி அழுவுறா. ஆனா, அவுக அடியேய் சிறுக்கி அவன் நெறையா சீர் தாறேன்னு சொல்லிருக்கான். கல்யாணத்தை நிறுத்த முடியாதுனு சொல்லிட்டு  சீரியல் பார்க்கப் போயிருது.


சின்னாத்தாளை எதிர்த்து எதுவும் பண்ண முடியாதுனு அவ தற்கொலை பண்ணிக்க கப்பலோட முன் பக்கத்துக்குப் போறா. அங்கே இருந்த ஹீரோ விருமண், ''இந்தா புள்ள நான் உன் மாமன்கிட்டேயிருந்து காப்பாத்துறேன்''னு சொல்லிட்டிருக்கும்போது கால் நழுவி கம்பியில் எலுமிச்சம்பழம் கட்டியிருந்த கயித்தைப் புடிச்சித் தொங்கிட்டிருக்கா. அப்போ விருமண்தான் அவளைக் காப்பாத்துறான். உடனே, ரோசாவும் விருமணைக் காதலிக்க ஆரம்பிச்சிடுறா. ரெண்டு பேரும் கப்பலைச் சுத்திச் சுத்தி டூயட் பாடி லவ் பண்றாங்க. பாட்டுல ஒரு சீன்ல விருமண்ணுக்கு கால்ல கம்பி குத்தி ரத்தம் வடியுது. ரோசாதான் எச்சியைத் துப்பி சரிபண்றா (டைரக்டர் டச்).


அப்போ சாராயம் குடிச்சிட்டு வர்ற மாயன் இவுக லவ்வுறதைப் பார்த்துடறான். கப்பலுக்குள்ளே பஞ்சாயத்து நடக்குது. அந்த நேரத்துல கப்பலோட கேப்டன் பிரபுவுக்கு ஹார்ட் அட்டாக் வருது. தனக்குப் பிறகு யாரும் இந்தக் கப்பலை ஓட்டக் கூடாதுனு முடிவு பண்ற பிரபு கப்பலை ஒரு பாறையை நோக்கித் திருப்புறாரு. தடுக்க வர்றவன்கிட்ட 'என் கப்பல்! என் உரிமை! புரட்சிப் போராட்டம்’ னு டயலாக் விட்டுட்டு டாப் கியர்ல கப்பலை ஓட்டுறாரு. பஞ்சாயத்துல இருக்கிறவங்களுக்கு விஷயம் தெரிஞ்சு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடுறாய்ங்க.


மாயன் டவுசர்லயே உச்சா போறான். விருமண், ரோசாவைக் கூட்டிக்கிட்டு தப்பிக்க முயற்சி பண்றான். கடைசியில பாறையில மோதி கப்பல் முங்குது. ஆனா, விருமண் ரோசாவைக் காப்பாத்திடுறான். அவ மயங்கிக்கிடக்கிறப்போ அவளோட தண்டட்டியைச் சுட்டுட்டு ஓடிடறான். இப்போ கிளைமாக்ஸ், திருடிட்டுப் போன தன்னோட தண்டட்டியையும், மனசையும் என்னைக்காவது ஒருநாள் கொண்டுவந்து குடுப்பான்னு உசிலம்பட்டி சந்தையில் வயசாகிப்போன ரோசா உக்காந்திருக்கா.

'எ ஃபிலிம்  பை பாரதிராஜா’ னு போட்டு முடிக்கிறோம்!

அஜித் - கௌதம் மேனன் திரைப்படம் கிரைம் திரில்லரா?

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் தல அஜித் நடிக்கவுள்ள அவரது 55 ஆவது படம் கிரைம் திரில்லராக உருவாகலாம் எனத் தெரிகிறது.


இம்மாத இறுதியில் படப்பிடிப்புக்கள் ஆரம்பமாகவுள்ள இப்படத்திற்காக அஜித் கடுமையாக உழைத்துவருகிறார். இப்படத்தின் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாகவும், எய்ட் பேக்ஸ் உடற்கட்டுடன் தோன்றவுள்ளதாகவும் ஏற்கெனவே செய்திகள் வெளியாகியுள்ளன.


தற்பொழுது இப்படத்தின் மற்றொரு முக்கியத் தகவலாக பாலிவுட் க்ரைம் திரில்லர் படங்களில் எழுத்தாளராகப் பணியாற்றிவரும் பிரபல எழுத்தாளரான ஸ்ரீதர் ராகவன் இப்படத்தில் இணையவிருப்பதுதான். பல வருடங்களாக மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் டி.வி தொடரான சி.ஐ.டி. தொடரின் பல எபிசோடுகளுக்கு இவர் எழுதியுள்ள ஸ்ரீதர் ராகவன், பாலிவுட் படங்களிலும் பணியாற்றிப் புகழ் பெற்றுள்ளார்.


பாலிவுட்டின் ஏக் ஹசீனா தீ, ஏஜெண்ட் வினோத் முதலான க்ரைம் திரில்லர் படங்களில் பணியாற்றியுள்ள ஸ்ரீதர் ராகவன், அஜித் - கௌதம் மேனன் படத்திலும் பணியாற்றவிருப்பதால் இப்படமும் க்ரைம் திரில்லர் வகையாக இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.


கௌதம் மேனன் - அஜித் இணையும் இப்படத்தின் ஹீரோயின் யாரென்பது இன்னும் அறிவிக்கப்படாமல் உள்ளது. மேலும் இப்படம் வருகிற செப்டம்பர் அல்லது தீபாவளி ரிலீசாக வெளியிடப்படலாம் எனவும் பேசப்படுகிறது.

‘வீரன் முத்துராக்கு’ வாகை சூடும். - திரைவிமர்சனம்!


நரேனும், சண்முக சுந்தரமும் பக்கத்து பக்கத்து கிராமத்தின் தலைவர்கள். 30 வருஷத்துக்கு முன்னால் நடந்த சண்டையில் சண்முக சுந்தரத்தின் ஒரு காலை நரேன் உடைத்துவிடுகிறார். அன்றிலிருந்து இருவருக்குள்ளும் பகை உண்டாகிறது.

இவர்களது மகன்கள் வளர்ந்து பெரியவர்களானதும், இவர்களுக்குள் நடக்கும் சிலம்பு சண்டையில் நரேனின் மகனான நாயகன் கதிர் வெற்றி பெறுகிறார். இதனால் மேலும் கோபமடைந்த சண்முக சுந்தரம் நரேனை பழிதீர்க்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்.

நரேனின் ஊரில் ஏதாவது கலவரத்தை தூண்டி நரேனை பழிதீர்க்க பார்க்கிறார். ஆனால், அது நடக்காமல் போகிறது. ஒருநாள் நரேன் இவர்கள் ஊர் வழியாக செல்லும் பேருந்தை வழிமறிக்கும் நாயகன், அந்த பேருந்தில் பயணம் செய்யும் நாயகி லியா ஸ்ரீயை பார்த்ததும் காதல்வயப்பட்டு விடுகிறார். நாளடைவில் நாயகியும் நாயகனை காதலிக்க ஆரம்பிக்கிறார். லியாஸ்ரீ சண்முக சுந்தரத்தின் தங்கையின் மகள்.

இந்நிலையில், நரேன் கொலை செய்யப்படுகிறார். மாடு முட்டிதான் அவர் இறந்தார் என போலீஸ் அந்த கொலையை மூடி மறைக்கிறது. தனது தந்தை இறந்த சோகத்தில் ஊரில் வாழப் பிடிக்காத நாயகன் காட்டுக்குள் சென்று வாழ்ந்து வருகிறார்.

நாயகிக்கும் சண்முகசுந்தரத்தின் மகனுக்கும் திருமணம் செய்துவைக்க முடிவெடுக்கின்றனர். இதுபிடிக்காத நாயகி, நாயகனைத் தேடி காட்டுக்குள் செல்கிறாள். இதை அறிந்த சண்முகசுந்தரம் அவளை பின்தொடர்ந்து சென்று நாயகியை கொன்று விடுகிறார்.

சித்தப்பா நமோ நாராயணனும், சண்முக சுந்தரமும் சேர்ந்துதான் தனது தந்தையை கொன்ற விஷயம் நாயகனுக்கு தெரிய வருகிறது. தன் தந்தை மற்றும் காதலி சாவுக்கு காரணமானவர்களை நாயகன் பழிதீர்த்தாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

நாயகன் கதிர் சண்டைக் காட்சிகளிலும், தந்தையையும், காதலியையும் பறிகொடுத்து சோகத்தை காட்டும்போதும் சிறப்பாக நடித்திருக்கிறார். எதார்த்தமான நடிப்பில் அழுத்தம் பதிக்கிறார். நாயகி லியாஸ்ரீக்கு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. இருந்தாலும், குறைவான காட்சிகளில் நிறைவாக நடித்திருக்கிறார்.

நரேனும், சண்முக சுந்தரமும் ஊர் தலைவர்களாக பளிச்சிடுகிறார்கள். நரேன் நடிப்பில் சிகரம் தொடுகிறார். சண்முக சுந்தரம் வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். நரேனின் தம்பியாக வரும் நமோ நாராயணனும் நடிப்பில் மிளிர்கிறார்.

இரண்டு தலைமுறை கதைகளை படத்தில் காட்டியிருக்கும் இயக்குனர், வன்முறையை ரொம்பவும் கொடுமையாக காட்டாமல் திரைக்கதையில் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார். ஆனால், இன்றைய தலைமுறைகளை இந்த படம் திருப்திபடுத்துமா? என்பது சந்தேகமே.

கோபாலகிருஷ்ணன் இசையில் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசைக்கு மெனக்கெட்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஜி.எஸ்.பாஸ்கர் ஒளிப்பதிவில் கிராமத்து பின்னணியில் எடுக்கப்பட்ட காட்சிகள் அருமை.

காதலை உணர்ந்தேன் - திரைவிமர்சனம்!

வறுமையில் இருக்கும் நாயகிக்கு படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசை. ஆனால், குடிகார அப்பாவால் தனக்கு எதுவும் வாங்கித்தர முடியவில்லை என நினைத்து வருந்துகிறாள்.

அப்போது, அவளது தோழி நாயகிக்கு பெரிய பணக்கார பையனாக பார்த்து காதலித்தால், அவன் உனக்கு வேண்டியதெல்லாம் வாங்கித் தருவான் என்று அறிவுரை கூறுகிறாள்.

முதலில் இதற்கு மறுக்கும் நாயகியை, தான் காதலிப்பதால் தனக்கு என்னென்ன நன்மை உண்டாகிறது என்பதை எடுத்துக்கூறி அவளை காதல் செய்ய வைக்க ஒப்புக்க வைக்கிறாள் தோழி.

அதன்படி, அதே ஊரில் இருக்கும் நாயகனை காதலிக்குமாறும் தோழி யோசனை கூறுகிறாள். நாயகியும் அவனிடம் வலியபோய் தன் காதலை சொல்கிறாள். ஆனால், அவனோ இவளை வெறுத்து ஒதுக்குகிறான். இறுதியில், அவனை தனது காதல் வலையில் விழ வைத்துவிடுகிறாள்.

காதலிக்க ஆரம்பித்தால் தனக்கு தேவையானதை அவனிடமிருந்து எல்லாம் வாங்கிக் கொள்ளலாம் என்ற நாயகியின் ஆசை நிறைவேறாமல் போகிறது. தான் கேட்ட எதையும் தனது காதலனால் வாங்கித்தர முடிவதில்லை.

இந்நிலையில், ஒருநாள் நாயகன் அவனது தாத்தாவை பார்க்க 3 நாள் பயணமாக வெளியூர் செல்கிறான். அந்த நேரத்தில் நாயகியின் தோழி வீட்டுக்கு வரும் அவளது முறைமாமன் நாயகியை பார்க்கிறான். பார்த்ததும் அவள்மீது காதலில் விழுகிறான். அவளுக்கு தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுக்கிறான். அவளும் எதையும் மறுக்காமல் வாங்கிக் கொள்கிறாள். ஒருநாள் தோழியின் முறைமாமன் நாயகியை திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக அவளிடம் கூறுகிறான்.

இறுதியில் நாயகி தனக்கு காதல்தான் முக்கியம் என்பதை உணர்ந்து தோழியின் முறைமாமனை உதறித் தள்ளினாளா? அல்லது தான் ஆசைப்பட்டதெல்லாம் வாங்கித் தருபவன்தான் முக்கியம் என்று தோழியின் முறைமாமனை ஏற்றுக் கொண்டாளா? என்பதே மீதிக்கதை.

கொஞ்சம் பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் நடிகர், நடிகை, இயக்குனர் ஆகிவிடலாம் என்பதற்கு இதுமாதிரியான படங்கள் ஒரு சிறு உதாரணம். சிறு பட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியிருக்கும் தயாரிப்பு சங்கங்கள் இதுபோன்ற சிறுபட்ஜெட் படங்களுக்கு முன்னுரிமை கொடுக்க முன்வந்தால் கண்டிப்பாக இப்போது தியேட்டருக்கு வரும் ரசிகர்கள்கூட இனிமேல் தியேட்டருக்கு வர தயங்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.

இப்படத்தின் லொக்கேஷன்களுக்கு இயக்குனர் ரொம்பவும் கஷ்டப்படவில்லை. வீட்டு மொட்டை மாடி, முற்றம், ஒற்றையடி பாதை என மாறி மாறி மூன்று லொக்கேஷன்களிலேயே படம் முழுவதையும் எடுத்திருக்கிறார்.

அதேபோல், நாயகன், நாயகியைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் ஒரே உடையிலேயே வந்து போகிறார்கள். காதலிக்காக நாயகன் திருடும் காட்சியில், அவர் திருடவேண்டும் என்பதற்காகவே அனைவரும் பணத்தை அவருக்கு முன்னால் வைத்துவிட்டுப் போவதுபோல் காட்சிப்படுத்திய விதம் கொடுமையிலும் கொடுமை.

நாயகன், நாயகி முகங்களை பார்த்து இவர்களுக்கு எதற்கு டூயட் என்று இயக்குனர் நினைத்திருப்பார்போல. பாடல் வைத்தால் இசைமைப்பாளருக்கு தனியாக சம்பளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக ‘சித்தாட கட்டிக்கிட்டு’ ‘வெண்ணிலா ஓ வெண்ணிலா’ போன்ற அழகான பழைய பாடல்களுக்கு இந்த கேவலமான மூஞ்சிகளை ஆடவிட்டு அந்த பாடல்களை கெடுத்ததோடு, நமக்கும் வெறுப்பை வரவழைத்திருக்கிறார்கள். அதற்கு பாடல்களே வைக்காமல்கூட இருந்திருக்கலாம்.

கதாபாத்திரங்கள் தேர்வு தொடங்கி, ஒவ்வொரு காட்சி எடுத்தவரைக்கும் படம் முழுக்க சொதப்பல்தான். கிரேன் மனோகர் 4 பேருடன் சேர்ந்து காமெடி என்ற பெயரில் கோபத்தை வரவழைத்திருக்கிறார். தஷியின் பின்னணி இசை ஓரளவுக்கு பரவாயில்லை. 

எதிர்வீச்சு - திரைவிமர்சனம்!

மலேசியாவில் பிரபலமாக இருக்கும் புட்சால் எனப்படும் இன்டோர் புட்பால் விளையாட்டை பற்றிய படம். மலேசியாவில் நடக்கும் இந்த விளையாட்டில் பிளாக் ஹார்ஸ் சாதாரண அணியாக இருந்து முன்னேறி வருகிறது.


அந்த அணியின் முக்கிய வீரர் ஹீரோ இர்பான். இந்த அணி ஸ்பான்ஸர்ஸ் கிடைக்காமல் தள்ளாடுகிறது. சின்னி ஜெயந்த், சிங்க முத்து அந்த அணிக்காக ஸ்பான்ஸர் பிடிக்க அலைகிறார்கள். அங்கு நடக்கும் போட்டி ஒன்றில் மலேசியாவின் நம்பர் ஒன் அணியோடு இவர்கள் மோதுகிறார்கள்.


அந்த அணியை நடத்தும் மலேசியாவின் பெரிய பணக்காரர் இறுதிப் போட்டிக்கு முன் இர்பானை கடத்தி ப்ளாக் ஹோர்ஸ் அணியை பலவீனமாக்குகிறார். இறுதிப் போட்டியில் பிளாக் ஹோர்ஸ் அணி வென்று மலேசியாவின் சாம்பியனாக ஆனதா? என்பதே முடிவு.

ஹீரோ இர்பான் துடிப்பாக இருக்கிறார். விளையாடும் காட்சிகளில் ஒரு அனுபவம் வாய்ந்த வீரரைப் போல் உற்சாகமாக இருக்கிறார். மற்றபடி பலவீனமான காட்சிகளில் எல்லோரும் ஏதோ நேரத்தை கடத்த வந்து போவதுபோல் இருக்கிறார்கள்.


நாயகி சாய்னா அழகாக இருக்கிறார். இறுதிக் காட்சியில் மட்டுமே நடிக்க வாய்ப்பு. அதிலும் நன்றாக நடித்திருக்கிறார். ஆனால், அதுவரைக்கும் தியேட்டரில் யாரும் இருப்பார்களா? என்பது சந்தேகமே.


சின்னி ஜெயந்த், வையாபுரி, சிங்கமுத்து என காமெடி பட்டாளம் இருந்தும் சிரிப்பு வரவில்லை. அவர்களே விழுந்து விழுந்து சிரித்துக் கொள்கிறார்கள். நளினியும் அவ்வப்போது வந்து போகிற மாதிரி கதாபாத்திரம்தான். இவரை இன்னும் கொஞ்சம் கூடுதலாக பயன்படுத்தியிருக்கலாம்.


மிக மோசமான திரைக்கதை, பலவீனமான காட்சிகள் ஆகியவற்றை வைத்துக் கொண்டு மோசமான இயக்கத்தில் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர். பிர்லா போஸ் ஒளிப்பதிவில் பட்ஜெட்டுக்கு தகுந்தாற்போல் மலேசியாவையும், புட்சால் விளையாட்டையும் காட்டியிருக்கிறார்கள். விளையாட்டு காட்சிகளில் மட்டும் பின்னணி இசை கேட்கும்படி இருக்கிறது. 

இப்போதுதான் முன்பைவிட சந்தோசமாக இருக்கிறேன் - ஹன்சிகா!!

எல்லோரும் காதலிக்கும்போதுதான் சொல்லமுடியாத சந்தோசத்தில் பறந்து கொண்டிருப்பார்கள். ஆனால், ஹன்சிகாவோ காதலை முறித்துக்கொண்ட பிறகுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று கூறி வருகிறார். அதோடு, முன்பு கலவரமான முகத்துடனேயே ஸ்பாட்டில் அமர்ந்திருப்பவர் இப்போது, கலகலப்பாக குஷி மூடில் வளைய வருகிறார்.


மேலும், தமிழில் நம்பர்-ஒன் குதிரையாக இருந்தவரின் மார்க்கெட் படிப்படியாக இறங்கி வந்த நிலையில், தற்போது விக்ரமின் ராஸ்கல், ஆர்யாவின் மீகாமன் படங்கள் புக்காகியிருப்பதோடு, அடுத்தடுத்து மேலும் சில முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடிப்பது குறித்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கிறார் ஹன்சிகா.


இப்படி சிம்புவுடனான காதலை முறித்துக்கொண்ட மறுகனமே, ஹன்சிகாவின் கால்சீட் டைரி நிரம்பத் தொடங்கியிருப்பதற்கு முக்கிய காரணமே அவரது தாய்குலம் மோனா மோத்வானிதானாம். சிம்பு-ஹன்சிகாவின் காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த அவர், இப்போது காதல் டிராப்பாகிப்போனதும், சில முக்கிய டைரக்டர் மற்றும் ஹீரோக்களுக்கு இந்த மகிழ்ச்சியான செய்தியை தெரியப்படுத்தியிருக்கிறார்.


அதோடு, வீழ்ந்து கிடக்கும் ஹன்சிகாவின் மார்க்கெட்டை நீங்கள்தான் சீர்படுத்த வேண்டும் என்றும் கனிவான வேண்டுகோளை வைத்தாராம். அதையடுத்துதான், ஹன்சிகா தாய்குலத்தின் வேண்டுகோளை தாழ்பணிந்து நிறைவேற்றும் பணிகளில் மேலும் சில மேல்தட்டு ஹீரோக்களும் சீரியசாக இறங்கியுள்ளார்களாம்.


அதனால்தான், தனது மார்க்கெட் கூடிய சீககிரமே கிடுகிடுவென்று உயர்ந்து தான் விட்ட இடத்தை எட்டிப்படித்து விடுலாம் என்ற நம்பிக்கை ஹன்சிகாவுக்கு இப்போது வந்துள்ளதாம். அதையடுத்துதான் அவர் முகத்தில் இத்தனை சந்தோசமாம். அதனால் காதல் முறிவைப்பற்றி யாராவது துக்கம் விசாரிப்பது போன்று விசாரித்தால், முன்பை விட இப்போதுதான் நான் ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன் என்று சொல்லி அவர்களின் வாயடைத்து விடுகிறார் ஹன்சிகா.

தொந்தி குறைய எளிய உடற்பயிற்சி!

தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும்..தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்கவும்.                                                                                                  

பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் வைக்கவும். கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும். ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது.


திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது.


அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும் நன்கு பயிற்சி கைகூடியபிறகு 50 முறை கூட செய்யலாம்.


இந்த பயிற்சியின் மூலம் எற்படும் பலன்கள்......


இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொந்தி குறைவது உறுதி பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும்.


இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.

பெண்களே உங்கள் அக்குள் கருமையாக இருக்கின்றதா? கவலை வேண்டாம்!

அக்குள் கருமையை இயற்கை முறையில் போக்குவதற்கு என்ன செய்ய வேண்டுமென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

01. எலுமிச்சை

அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு எலுமிச்சை ஒரு சிறந்த பொருள். ஏனெனில் அதில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், எலுமிச்சையைக் கொண்டு தினமும் அக்குளில் தேய்த்து, ஊற வைத்து கழுவினால், அக்குளில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, அக்குள் வெள்ளையாவதோடு, அக்குள் துர்நாற்றத்தில் இருந்து விடுபடலாம்.

02. மஞ்சள், தயிர்

மஞ்சள் மற்றும் தயிரில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை நிறைந்துள்ளது. எனவே சருமத்தில் உள்ள கருமையைப் போக்க, மஞ்சளை தயிரில் கலந்து, அக்குளில் தேய்த்து ஊற வைத்து கழுவினால், அக்குள் கருமையை நிச்சயம் போக்கலாம்.

03. தயிர், எலுமிச்சை

தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஒன்றாக கலந்து, அக்குளில் தடவி 10 நிமிடம் ஸ்கரப் செய்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தொடர்ந்து வாரத்திற்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.

04. வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காயை அரைத்து 1/2 கப் சாறு எடுத்து, அதில் சிறிது உருளைக்கிழங்கை அரைத்து கலந்து, அக்குளில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 10-15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல வித்தியாசம் தெரியும்.

05. சந்தனப்பவுடர், பால்

சந்தனப் பவுடரை பால் ஊற்றி பேஸ்ட் போல் செய்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அக்குளில் தடவி காய வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு 2-3 முறை செய்தால், அக்குள் வெள்ளையாகும்.

06. குங்குமப்பூ

குங்குமப்பூவை பாலில் ஊற வைத்து, அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஈரமான பஞ்சு கொண்டு துடைத்து, பின் நீரில் கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், அக்குளில் உள்ள கரும்புள்ளிகள் நீங்கி, அக்குள் வெள்ளையாகிவிடும்.

07. கடலைமா, பால், மஞ்சள்

கடலைமா, பால், மஞ்சள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் செய்து, குளிக்கும் முன் அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளித்தால், அக்குள் கருமை நீங்கிவிடும்.

08. உருளைக்கிழங்கு

இது மிகவும் எளிமையான ஒரு ஸ்கரப். அதற்கு உருளைக்கிழங்கை அரைத்து, அதனை தினமும் காலையில் அக்குளில் தடவி ஸ்கரப் செய்து, பின் குளித்தால், கருமையான அக்குளில் இருந்து விடுபடலாம். 

சிவப்பு விளக்கு நல்லதாம் !

இரவுப் பணிகளின்போது அலுவலகத்தில் சிவப்பு விளக்கு எரிவது ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது என சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.


வெள்ளை எலிகளைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வில், நீல வெளிச்சம் ஆரோக்கியத்தில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என்றும், அதற்கு அடுத்தபடியாக தீங்கு விளைவிக்கக் கூடியது வெள்ளை நிற வெளிச்சம் என்றும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


 அதே நேரம், சிவப்பு விளக்கு வெளிச்சத்திலிருந்த வெள்ளை எலிகளுக்கு, மிகக் குறைந்த அளவே மன அழுத்தம் தொடர்பான அறிகுறிகள் தோன்றின.


அமெரிக்காவின் ஓஹியோ பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் பங்கேற்ற ராண்டி நெல்சன் கூறும்போது, “”இரவு நேரங்களில் பணியாற்றுபவர்களுக்கு மனச் சோர்வு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


வெள்ளை நிற வெளிச்சத்தைப் போல் சிவப்பு நிற வெளிச்சம் ஆரோக்கியத்தைக் கெடுப்பதில்லை என்ற எங்கள் ஆய்வு முடிவுகள் அவர்களுக்கு நல்ல தீர்வைத் தரும்” என்று தெரிவித்தார்.