Tuesday 4 February 2014

சமையல் அறையில் மருத்துவ பொருட்கள்!

சமையல் அறையில் மருத்துவ பொருட்கள்

சுக்கு :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றுஞ் செய்கையும், பசித்தீயை தூண்டும் செய்கையும் உண்டு. இதனால் வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், அசீரணம், பேதி, குன்மம், சூலை, வாய்வ முதலியன குணமாகும். சுக்குத்தூளில் திரிகடிப்பிரமாணம் எடுத்து சமன் கற்கண்டு சேர்த்து பாலில் அருந்திவர வாய்வு நீங்கும். சுக்கிற்க்கு உப்பை அரைத்து கவசஞ் செய்து நெருப்பணலில் வாட்டவும். இப்படி 10முறை செய்து இடித்து சூரணித்து வைத்துக்கொண்டு இதில் வேளைக்கு 1/4முதல் 1/2 வராகனெடை வீதம் அருந்தி வர, வயிற்றுவலி, வயிற்றுப்பிசம், அசீரணம், உஷ்ணபேதி, குன்மம், சூலை முதலியன குணமாகும்.

மிளகு :- இதற்கு முறைசுர மகற்றி, வாதமகற்றி செய்கையும் உண்டு. இதனால் குளிர்சுரம், வாய்வு, சுரம், அசீரணம், முதலியன குணமாகும். மிளகை இளம் வறுப்பாக வறுத்தி டித்துச் சூரணத்தில் நாலைந்து குன்றினெடை வீதம் சமன் கற்கண்டு தூள் கூட்டிப் பாலில் கொடுத்து வர இருமல், தொண்டை, ரணம், வாய்வு, வயிற்றுவலி, முதலியன குணமாகும். மிளகைத் தனியாகவாவது அல்லது தும்பைப்பூவுடன் சேர்த்தாவது முறைப்படி குடிநீரிட்டு கொடுத்து வர குளிர்சுரம், முறைச்சுரம் முதலியன குணமாகும்.

திப்பிலி :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அற்றல், கபத்தை சமணப்படுத்துதல் சீரணசக்தியை உண்டாக்கல் முதலிய செய்கையு முண்டு. இதனால் இருமல், தொண்டை, கபக்கட்டு, இரைப்பு நோய், அசீரணம், பேதி, முதலியன குணமாகும். திப்பிலி யை இளம் வறுப்பாக வறுத்தி டித்தச் சூரணத்தில் திரிகடிப்பிரமாணம் தேனுடன் சேர்த்து அருந்திவர இருமல், தொண்டைக்கட்டு, கபம் முதலியன குணமாகும். திப்பிலியுடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்து இளம் வறுப்பாக வறுத்தி டித்தச் சூரணத்து தேனில் கொடுத்து வர விக்கல், வாந்தி, அரோசகம், அசீரணபேதி, பசியின்மை முதலியன குணமாகும்.

கடுக்காய் :- இது துவர்ப்புச்சுவை யுடையதாக இருப்பினும் மலத்தைப் போக்கும் செய்கையுடையது. இதனால் வாதகப நோய்கள் காமாலை, பெருவயிறு, குன்மம், விரணம் முதலியன குணமாகும். கடுக்காய்த்தோலை குடிநீரிட்டு விரணம், இரத்தமூலம், பெரும்பாடு, வாய், ரணம் முதலிய நோய்களில் அவ்வவ்விடங்களைக் கழுவிவர நல்ல பலனைத் தரும். கடுக்காய்ச் சூரணம் 1/2 வராகனெடை அருந்த மலங்கழியும். கடுக்காய் சூரணத்தில் வேளைக்கு 5முதல் 10 குன்றி வீதம் காலைதோறும் தினம் 1 வேளை சாப்பிட்டு வர உந்திரணம், வயிற்று வலி, மூலம், குன்மம், வாதகப நோய்கள் முதலியன குணமாகும். கற்பமாகவும் பயன் படும்.

நெல்லிக்காய் :- பச்சை நெல்லிக் காய்க்கு குளீச்சி யுண்டாக் கும் செய்கையும்உண்டு. இதுவும் மலத்தைப் போக்கும். பச்சை நெல்லிக்காய்ச்சாறுடன் சமன் சர்க்கரை சேர்த்து மணப்பாகு செய்து 2முதல் 4 தேக்கரண்டி வீதம் அருந்தி வர வாந்தி, அரோசகம், இரத்தபித்தம், நீர்சுருக்கு முதலியன குணமாகும். ஒரு தோலா நெல்லிவற்றலை ஒர் இரவு வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவர பித்தாதிக்கம், உட்சூடு, முதலியன குணமாகும்.

தான்றிக்காய் :- இதற்கு துவர்ப்புச்செய்கையும், கோழை அகற்றுஞ் செய்கையும்உண்டு. இதுவும் மலத்தைப் போக்கும். இதனால் சுவாசம், காசம், இரத்தபித்தம், கீழ்மேகம், முதலியன குணமாகும். தான்றிக் காய்த்தோல் 1/4 பலம் எடுத்து சூரணித்துச் சமன் சர்க்கரை சேர்த்து நீரிலாவது அல்லது தேனுடனாவது அருந்தி வர உஷ்ண இருமல்,கபக்கட்டு, ரணம், தொண்டை, நீர்சுருக்கு பிரமேகம் முதலியன குணமாகும். தான்றிக் காய்த்தோலைக் குடிநீரிட்டு வாய் கொப்பளித்துவர வாய் ரணம், பல் வலி முதலியன குணமாகும். விரணங்களை கழுவிவர விரைவில் ஆறும்.

சீரகம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்தீயைத்தூண்டல், சீரண சக்தியை உண்டாக்கல், மலத்தைக்கட்டல் முதலிய செய்கையும் உண்டு. இதனால் அசீரணம், அதிசாரம் கிரகணி, பித்தாதிக்கம், முதலியன குணமாகும். சீரகத்தைதனியாக வாவது, அல்லது சிறிது மிளகு சேர்த்தாவது வறுத்து இடித்துச் சூரணித்து1/4 அல்லது1/2 வராகனெடைவீதம் நெய்யில்கொள்ள மந்தம், அசீரணம், பேதி முதலியன குணமாகும். சீரகத்தை இஞ்சிச் சாற்றிலும், பழச் சாற்றிலும், ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணித்து சமன் நாட்டுச்சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துக கொண்டு வேளைக்கு 1/2 முதல் 1 வராகனெடைவீதம் தினம் இரு வேளையாக அருந்திவர பித்தாதிக்கம்,வாந்தி, அரோசகம், அசீணம் முதலியன குணமாகும். சீரகத்தை எண்ணெய்யிலிட்டுக் காய்ச்சி வடித்து தலைமுழுகி வர பித்தமயக்கம், நேத்திரரோகம் தலைபாரம் முதலியன குணமாகும்.

கருஞ்சீரகம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், சூதகச் சிக்கலை அகற்றல், கிருமிகளை நாசம் செய்தல் முதலிய செய்கையும்உண்டு. இதனால் கரப்பான், விரணம், வயிற்றுப் பொருமல், கிருமிநோய், குன்மம், சூதகச் சிக்கல் முதலியன குணமாகும். இதனுடன் சமன் சுக்கு சேர்த்து இடித்துச் சூரணித்து 1/4 விராகனெடை வீதம் நீரில் கொடுத்துவர வயிற்றுப் பொருமல், வயிற்று வலி, மார்புவலி, குன்மசூலை முதலியன குணமாகும். இதை காடிவிட்டரைத்து கரப்பான், சொறி, சிரங்கு, சர்மபடைகள் முதலியவற்றிற்குப் பூச குணமாகும்.

பெருஞ்சீரகம் :- இதுவே சோம்பு எனப்படும். இதனால் வெட்டை, நீர்சுருக்கு, அசீரணம், வயிற்றுப் பூசம், குன்மம், இருமல் சுவாசம் முதலியன குணமாகும். இதனை இளவறுப்பாய் வறுத்திடித்து சூரணித்து 1/4 வராகனெடைவீதம் சமன்சர்க்கரை சேர்த்து அருந்திவரலாம். இதனை குடிநீர் அல்லது தீநிர் செய்தும் வழங்குவதுண்டு.

இலவங்கம் :- இதற்கு இசிவகற்றல், வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்தீயைத் தூண்டல், முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, வாந்தி, கண்ணோய், பல்வலி முதலியன குணமாகும். இதை நீர்விட்டரைத்து நெற்றியில் தடவ சலதோஷம், நீரேற்றம் தலைபாரம் முதலியன குணமாகும். இதன் ஊறல் குடிநீர் வாந்தி பேதி முதலியவற்றிற்கு வழங்குவதுண்டு. இதன் தைலம் பல்வலிக்குத் தடவ குணத்தைத் தரும். இன்னும் இதனை இருமல், இரைப்பு முதலியவற்றிற்கு வழங்குவதுண்டு.

இலவங்கப்பட்டை :- இதற்கு துவர்ப்புச்செய்கை உண்டு. இதனால் பேதி, சீதபேதி, தாதுநட்டம் முதலியன குணமாகும். இதனைத் தனியாகவாவது அல்லது காய்ச்சுக்கட்டியுடன் சேர்த்தாவது சூரணஞ் செய்து கொடுத்துவர பேதி, சீதபேதி, கிரகணி முதலியன குணமாகும்.

ஏலக்காய் :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல் பசித்தீயைத்தூண்டல், முதலிய செய்கைகள் உண்டு.இதனால் வாந்தி தாகம், பித்தாதிக்கம், உஷ்ணபேதி முதலியன குணமாகும். ஏலக் காயை சதைத்து நீரிட்டு காய்ச்சி அருந்த தாகம், பித்தம், வாந்தி முதலியன குணமாகும்.

சிறுநாகப்பூ :- இதற்கு வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்தீயைத்தூண்டல், மலத்தைக்கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, சீதபேதி, வாய்வு, இருமல், விரணம் முதலியன குணமாகும். இதனை நெய்விட்டு இளவறுப்பாய் வறுத்திடித்து சூரணித்து வைத்துக் கொண்டு வேளைக்கு 1/4, 1/2 வராகனெடை
வீதம் அருந்திவர அசீரணம், பேதி, சீதபேதி, இரத்தமூலம், பெரும்பாடு, கபத்தோடு கூடிய இருமல் முதலியன குணமாகும்.

வெந்தயம் :- இதற்கு மலத்தைக்கட்டல் , உள் அழலை ஆற்றல், உடலை உரமாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பேதி, சீதபேதி, இரத்தபித்தம், பிரமேகம், கணச்சூடு, அஸ்திசுரம் தாது நட்டம் முதலியன குணமாகும். வெந்தயத்தை நீரிலிட்டு வேகவைத்து, தேன் விட்டு கடைந்து அருந்தி வரலாம். இதனால் மேற்கூறப்பட்ட பலன்கள் உண்டாகும்.

கடுகு :- இதற்கு மேலுக்கு வெப்பமுண்டாக்கி, தடிப்புண்டாக்கி செய்கைகளும்; உள்ளுக்குள் வாந்தி யுண்டாக்கல், சீரணத்தை யுண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் பசிமந்தம், வாததோஷம், விக்கல் முதலியன குணமாகும். 1 முதல் 4 வராகனெடைக் கடுகை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வாந்தியாகும். இது வமன சிகிச்சைக்கு பயன்படும். கடுகுத்தூள் 1-2 வராகனெடை ஆழாக்கு வெநீரில் ஊறல் குடிநீராகச் செய்து வடித்துக் கொடுக்க விக்கல் குணமாகும். வாதரோகங்ககு கடுகை அரைத்து பற்றிடுவதுமுண்டு.

ஓமம் :- இதற்கு இசிவகற்றல், வயிற்றிலுள்ள வாயுவை அகற்றல், பசித்தீயைத்தூண்டல், மலத்தைக் கட்டல்முதலிய செய்கைகள் உண்டு. இதனால் மந்தம், அசீரணபேதி, வயிற்றுப் பொருமல் முதலியன குணமாகும். ஓமத்துடன் சமன் மிளகு சேர்த்து இளவறுப்பாய் வறுத்திடித்துச் சூரணித்து திரிகடிப் பிரமாணம் வெல்லத்துடன்சேர்த்து அருந்திவர மந்தம், அசீரணபேதி, வயிற்றுவலி முதலியன குணமாகும். ஓமத்துடன் பொடுதலை சேர்த்துக் குடிநீர்செய்து குழந்தைகட்குக் காணும் மாந்தக் கழிச்சலுக்கு வழங்குவதுண்டு. ஓமத் தீநீர் செய்தும் வழங்குவதுண்டு.

பெருங்காயம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை அகற்றல், இசிவை யகற்றல், ரிதுவை யுண்டாக்கல் முதலியச் செய்கைக ளுண்டு. இதனால் வயிற்றுப்புசம், அசீரணம், குன்மம், வாதாதிக்கம், சூதகச்சிக்கல், செவிநோய் முதலியன குணமாகும். பெருங்காயத்தை நீர் விட்டரைத்து சீதள சைத்திய வீக்கங்களுக்கு மேலுக்கு பற்றிட குணமாகும். காயத்தை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி காதில்விட காதுவலி குணமாகும். காயத்தைச் சிறிது நெய்விட்டு பொரித்துப் பொடித்து 2-3 குன்றிஎடைவீதம் வெல்லத்துடன் சேர்த்து அருந்திவர வயிற்றுவலி, வயிற்றுப்புசம், அசீரணம் முதலியன குணமாகும். பொரித்த காயத்துடன் வெள்ளைப் பூண்டும் வெல்லமும் சேர்த்து அரைத்துக் கொடுத்துவர மாதர்களுக்கு பிரசவத்திற்குப்பின்காணும் உதிரச்சிக்கலை ந்ன்கு வெளிப்படுத்தும்.

கடுகுரோகணி :- இதற்கு மலத்தைப் போக்கல், முறைசுரமகற்றல் முதலிய செய்கைகள் உண்டு. இதைத் தனியாகவாவது அல்லது இதர சரக்குகளுடன் சேர்த்தாவது மலக்கட்டுடன் கூடிய சுரத்திற்குக் குடிநீரிட்டு வழங்குவதுண்டு.

சாதிக்காய் :- இதற்கு முக்கியமாக வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல், மலத்தைக் கட்டல் முதலிய செய்கைகள் உண்டு. மற்றும் காமத்தைப் பெருக்கல், உடலுக்கு உரம்தரல் முதலிய செய்கைகளும், அதிக அள்வில் மயக்கத்தை உண்டாக்கும் செய்கையும் உண்டு. இதனால் பேதி, கிரகணி, தாது நட்டம் முதலியன குணமாகும். ஒரு பங்கு சாதிக்காயுடன் இரண்டு பங்கு சீரகம் சேர்த்திடித்துச் சூரணம் செய்து வேளைக்கு திரிகடிபிரமாணம் சமன் சர்க்கரை சேர்த்து அருந்திவர முற்கூறப்பட்ட பிணிகள் குணமாகும். சாதிக்காயின் மேலே மூடியுள்ள தோலுக்கு சாதிபத்திரி யென்று பெயர். இதற்கும் சாதிக்காயின் செய்கையே உண்டு. இதையும் சாதிக்காயைப் போலவே பேதி கிரகணி முதலியவைகட்கு வழங்கும் மருந்துகளிலும், தாது விருத்திக்குரிய லேகியங்களிலும் சேர்ப்பதுண்டு.

தாளிசபத்திரி :- இதற்கு கோழையகற்றல், பசித்தீயைத் தூண்டல், மலத்தை கட்டல், உடலுக்கு உரம்தரல் முதலியச் செய்கைகள் உண்டு. இதனால் அசீரணபேதி, நாட்பட்ட அதிசாரம், கிரகணி, துர்பலம், நாட்பட்ட இருமல், இரைப்பு, அஸ்திசுரம் முதலியன குணமாகும். இதன் சூரணத்தில் 1/4, 1/2 வராகனெடை வீதம் ஆடாதோடை சுரசத்துடன் சேர்த்து தேன் கூட்டிக் கொடுத்துவர இருமல், இரைப்பு, கபக்கட்டு முதலியன குணமாகும். தாளிசபத் திரி சூரணத்துடன் சமன் திரிகடுகு சூரணம் சேர்த்து அருந்திவர பசி மந்தம், அசீரணம், பேதி முதலியன குணமாகும்.

மாசிக்காய் :- இதற்கு மலத்தைக் கட்டச்செய்தல், விரணத்தை ஆற்றல், உதிரப்போக்கைத் தடுத்தல், உடலுக்கு உரந்தரல் முதலியச் செய்கைகள் உண்டு. இதனால் அக்கரம், விரணம், அதிசாரம், உட் சூடு, கணச்சூடு, சீதபேதி முதலியன குணமாகும். உடலுக்கு பலந்தரும். இதனை நீர் விட்டிழைத்து வாய் ரணம், நாசி விரணம், ஆசனவெடிப்பு, மூலவிரணம், தீச்சுட்ட புண் முதலியவைகட்கு மேலுக்குத் தடவிவர விரைவில் குணமாகும். இதன் சூரணத்தில் 5-முதல் 10-குன்றி வீதம் தினம் இருவேளையாகக் கொடுத்து வர இரத்தகாசம், இரத்த வாந்தி இரத்தமூத்திரம், பேதி, சீதரத்த பேதி, பெரும்பாடு முதலியன குணமாகும்.

அரத்தை :- இதில் சிற்றரத்தை பேரரத்தை என இருவகை உண்டு. இவைகளின் குணம் ஏறத்தாழ ஒன்றேயாகும். இதற்கு முக்கியமாக கோழையை அகற்றுஞ் செய்கையும், வெப்பத்தைத் தணிக்குஞ் செய்கையும் உண்டு. இதனால் இருமல், ஈளை, கபக்கட்டு, சுரம், வாயு முதலியன குணமாகும். இதன் தனி சூரணம் 1/4- வராகனெடை வீதம் சமன் கற்கண்டு சேர்த்து நெய் அல்லது தேனில் அருந்திவர இருமல், கபக்கட்டு முதலியன குணமாகும். வாதகப சுரக் குடிநீர்களிலும் இதனைச் சேர்த்து வழங்குவதுண்டு.

அதிமதுரம் :- இதற்கு கோழையகற்றல், உள் அழலைத் தனித்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் இருமல், தாகம் தொண்டைரணம், உடல் காங்கை முதலியன குணமாகும். தனி அதிமதுரச் சூரணம் 5-முதல் 10-குன்றி எடை வீதம் சமன் கற்கண்டு சேர்த்து சிறிது காய்ச்சிய பாலில் அருந்திவர உஷ்ணத்தினால் ஏற்பட்ட இருமல், தொண்டைரணம், கபக்கட்டு முதலியன குணமாகும்.

அக்கராகாரம் :- இதற்கு உமிழ் நீரைப் பெருக்கல், வெப்ப முண்டாக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் நாவரட்சி, தாகசுரம், ஜன்னிதோஷம் முதலியன குணமாகும். இதில் ஓர் துண்டை வாயிலிட்டு மென்று சுவைத்து வரலாம். அல்லது ஊறல் குடிநீரிட்டும் வழங்கலாம். இதனால் மேற்கண்ட குணங்கள் ஏற்படும்.

கோஷ்டம் :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல் வியர்வையைப் பெருக்கல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் வாதம், சுரம், இருமல், ஈளை, தோஷசுரம், வீக்கம் முதலியன குணமாகும். இதனைப் பெரும்பாலும் சுரக் குடிநீர்களில் சேர்த்து வழங்குவதுண்டு.

வசம்பு :- இதற்கு வயிற்றிலுள்ள வாய்வை யகற்றல், பசித்தீயைத் தூண்டல், முறை சுரத்தை தடுத்தல், கிருமிகளை நாசஞ் செய்தல் முதலிய செய்கைகள் உண்டு. இதனால் சர்பகீட தாவர விஷங்கள், சுர சன்னிதோஷம், மாந்தக் க்ழிச்சல், மலக்கிருமி முதலியன குணமாகும். வசம்பை ஊறல் குடிநீரிட்டுக் கொடுக்க குழந்தைகட்குக் காணும் மாந்தக் கழிச்சல், முறை சுரம் முதலியன குணமாகும். இதைச் சுட்டுக் கரியாக்கி ஆமணக்கு நெய்யில் குழைத்து குழந்தைகளின் அடிவயிற்றில் பூச வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி முதலியன குணமாகும். வசம்பிற்கு மஞ்சளை அரைத் துக் கவசமிட்டு கருகும்படி சுட்டுக் கரியாக்கித் தேனில் கொடுத்து வர நேர்வாளத்தினால் ஏற்பட்ட நிற்காதபேதி, வாந்தி, வயிற்று வலி முதலியன குணமாகும்.

விஜய் புதியபடம் - காளிகாட் கோவிலில் பூஜையுடன் தொடங்கியது!

விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் இருவரும் இணைந்த முதல் படம் ‘துப்பாக்கி’. இப்படம் பல சர்ச்சைகளை சந்தித்தாலும் பெரிய வெற்றியை பெற்றது. சமீபத்தில் விஜய் நடித்த படங்களில் அது பிரமாண்ட படைப்பாகவும் இருந்ததால் முருகதாஸ் மீது விஜய்க்கு தனி மரியாதையும் ஏற்பட்டது.

அதனால் ‘துப்பாக்கி’யைத் தொடர்ந்து ‘தலைவா’, ‘ஜில்லா’ படங்களில் பிசியாக இருந்த விஜய், முருகதாசுடன் மீண்டும் இணைந்து பணியாற்ற முடிவு செய்திருந்தார். இரண்டு படங்களும் முடிந்த பிறகு முருகதாசுடன் இணைவது என முடிவு செய்திருந்த நிலையில், தற்போது இரண்டு படங்களும் திரைக்கு வந்துவிட்டதால் முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க விஜய் தயாராகிவிட்டார்.

இந்நிலையில், இருவரின் கூட்டணியில் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள காளிகாட் கோவிலில் பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்துள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். துப்பாக்கி படத்தின் வெற்றியை ருசித்த இந்த கூட்டணி மீண்டும் ஒரு மாபெரும் வெற்றிப்படத்தை தரும் முடிவில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

ஆறுதல் சொல்வது எப்படி ?

ஆறுதல் சொல்வது எப்படி ?

உங்கள் நண்பரோ மிகவும் நெருங்கியவரோ மனம் உடைந்து போயிருக்கும் நேரத்தில் அல்லது மனம் சோர்வுற்றிருக்கும் போது அவர்களை ஆறுதல் படுத்துவது கொஞ்சம் கஷ்டமான காரியம் தான். அந்த நேரம் என்ன சொல்லித் தேற்றுவது, எப்படி நடந்து கொள்வது என்று நீங்கள் குழம்பிப் போகலாம். நல்ல விதமாக ஒருவரை எப்படித் தேற்றுவது என்று பார்ப்போமா?.

• "அட, என்ன எப்ப பார்த்தாலும் ஒரே கவலையா இருக்கே, கவலையை விட்டுத் தள்ளுப்பா, இதெல்லாம் சகஜம் தான்" என்று கவலையை விடச்சொல்லி உபதேசம் செய்யாதீர்கள். கவலை அல்லது மனச் சோர்வை யாரும் வேண்டுமென்று கட்டிப் பிடித்துக்கொண்டு இருக்கமாட்டார்கள். அது அவர்களுக்கு ஏற்படும் உணர்வு, அவர்கள் அனுபவப்படுவது.

காய்ச்சல் தலைவலி போன்ற ஒர் உடல் நலக் குறைவு. அடிபட்டு ஆஸ்பத்திரியில் கிடப்பவரைப் போய் என்ன கை காலெல்லாம் வீங்கியிருக்கே எல்லாத்தையும் உதறித் தள்ளிவிட்டு எழுந்திரு என்று கூறுவது எவ்வளவு அபத்தம். மனச் சோர்வு என்பது உண்மையிலேயே நோய் தாக்குவதைப் போன்ற ஒரு பாதிப்பு. மனம் உடைந்து போனவர் தன்னைத் தானே உடனே அதிலிருந்து மீண்டு சந்தோசமாக ஆகிவிட முடியாது. காலம் தான் ஆற்ற முடியும். மருத்துவமும் தேவைப்படும்.

• மனம் உடைந்து போயிருப்பவருக்கு தன் துன்பங்களை யாரிடமாவது சொல்லி அழத்தோன்றும். அதைக் கேட்க காதுகள் தான் தேவை. எனவே கேளுங்கள் நன்றாக செவி சாய்த்து கேளுங்கள். அவரது கவலை சிலவேளை உங்களுக்கு அற்பமாக தெரியலாம். அவருக்கு அதன் பாதிப்பு ஆழமாக இருக்கலாம். எனவே எவ்வித அலட்சியமும் காட்டாமல் உண்மையாகவே பரிவோடு அவர் சொல்வதை கேளுங்கள்.

• பொதுவாக உளம் சோர்ந்திருப்பவர்கள் தனிமையை விரும்புவார்கள். தனிமை நிலமையை இன்னும் மோசமாக்கி விடக்கூடும். எனவே அவர்களைக் கொஞ்சம் எதாவது செயல்களில் ஈடுபடத் தூண்டுங்கள். நீங்களும் அவர்களோடு சேர்ந்து செயல் படுங்கள். கவலை தரும் நினைவுகளை கொஞ்ச நேரம் மறந்திருக்க உதவுங்கள்.

• வெளியே எங்காவது காலாற நடந்து விட்டு வரலாம். எப்போதும் ஓரிடத்தில் முடங்கிக் கிடக்காமல், பீச், பார்க் என்று போகலாம். சேர்ந்து பஸ் பயணம் மேற்கொள்ளலாம். புதிய விஷயங்களில் மனம் ஈடுபடும் போது மனம் கவலைகளை சற்று மூலைக்குத் தள்ளி விடும்.

• சுத்தமான ஆடைகள் அணிவது, முடிவெட்டி கொள்வது, தினமும் ஷேவ் செய்து கொள்வது, பிறருடன் பழகுவது போன்றவற்றை தூண்டுங்கள்.

• அவர்களை ஊக்கப்படுத்துங்கள் ஆனால் எதையும் திணிக்காதீர்கள், வற்புறுத்தாதீர்கள், நிர்பந்தப் படுத்தாதீர்கள். அப்படிச் செய்வது அவர்களுக்கிடையே நமக்கு இடைவெளி உண்டாக்கி விடும். நம்மை விட்டு விலகியிருக்கத் தூண்டும். உங்கள் அழைப்பை, ஆறுதலை, ஆலோசனைகளை அவர்கள் ஏற்க மறுத்தால் வற்புறுத்தாதீர்கள். அவர்களுக்கு கொஞ்சம் டைம் கொடுத்து இன்னொரு நாள் மிகவும் தன்மையாய் எடுத்துக் கூறுங்கள்.

• நன்றாக சாப்பிட, நன்றாக தூங்க உதவுங்கள்.

• புகை, போதைப் பொருட்களை நாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

• மனச்சோர்வு அகற்ற நிறைய மருந்துகள் உண்டு. மருத்துவ உதவி எடுத்துக் கொள்ளத் தூண்டுங்கள். சரியான உளவியல் மருத்துவர்களிடம் கூட்டிச்சென்று தக்க ஆலோசனையும் சிகிட்சையும் பெற உதவி செய்யுங்கள்.

• பிரச்சனைகள் ஏதுமற்ற அமைதியான சூழலை உருவாக்கிக் கொடுங்கள். வீட்டில் மேலும் மன அழுத்தங்கள் உருவாக்கும் நிலைமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

• அவர்களது தினசரி வாழ்க்கையில் ஒரு சிட்டையை, ஒழுங்கை அமைத்துக் கொள்ள உதவுங்கள்.

• கவலைக்குக் காரணத்தை ஞாபகப்படுத்தும் பொருட்கள், இடங்கள், மனிதர்களை விட்டு விலகி இருப்பது கவலையை விரைவில் மறக்க உதவும். கவலையை மறக்க வருந்தி முயற்சிக்கக் கூடாது. நினைவுகளில் இருந்து தானாக கவலை அழிய வேண்டும்.

• மனச் சோர்வு வாழ்க்கையில் நம்பிக்கை இழக்கச் செய்து விடும்.எனவே நம்பிக்கையூட்டுங்கள்.

• எது அவர்கள் மனதை கொஞ்சம் இலேசாக்குகிறதோ அதில் அதிகம் ஈடுபட தூண்டுங்கள். உள்ளத்தை அதிகம் சுறு சுறுப்பாக வைத்திருக்கும் எதாவது ஒன்றைக் கற்றுக்கொள்ள உதவுங்கள். கம்யூட்டர், இணையம், புதிய நட்பு, கவலை மறக்கச்செய்யும்.

• உலகத்தைப் பற்றிய கண்ணோட்டத்தை மனசோர்வு சிதைத்து விடும். காலமும் சரியான சிகிட்ச்சையும் நிச்சயம் அதை மீட்டுத்தரும்.

ஒரு திடீர் மரணமோ, அதிகப்படியான சோகமோ மூளையில் கார்டிகோட்ரோபின் எனும் அமிலத்தை சட்டென சுரக்கவைத்து மூளை முழுவதும் பரப்பி விடுகிறது. இந்த அமிலமே அதிகப்படியான மன அழுத்தத்தையும், தாங்கொண்ணா துயரத்தையும் தருவிக்கிறது என்று அட்லாண்டாவின் எமோரி பல்கலைக்கழக மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளனர். உறவுகளை இழக்கும் போது உண்டாகும் அதிகப்படியான வலியைக் குறைக்கவும், கடும் துயரத்திலிருந்து விரைவில் மீளும் வழியைக் காட்டவும் இந்த கண்டுபிடிப்பு உதவும்.

துயரங்கள் தவிர்க்க இயலாதவை, அவற்றைத் தாங்கும் மனம் எளிதில் அமைந்து விடுவதில்லை என்பது இழப்பைச் சந்தித்தவர்களால் புரிந்து கொள்ள முடியும். அத்தகைய துயரங்களின் அழுத்தத்தை மருந்து, மாத்திரைகள் வாயிலாக குறைக்க முடியுமெனில் அதுவும் நல்ல செய்தி தான்.

சோர்வை நீக்கும் உணவு வகைகள்:

சோர்வை நீக்கி மூளைக்கும் மனதிற்கும் புத்துணர்ச்சி தருவதற்கு சோளம், புரதம் அதிகம் உள்ள உருளைக்கிழங்கு, ஃபோலிக் அமிலம் உள்ள முட்டை கோஸ், சப்பாத்தி, தயாமின் என்ற வைட்டமின் நிறைந்த கொண்டைக்கடலை, இரும்பு சத்து நிறைந்த பேரீச்சை, மொச்சை, பீட்ரூட் முதலிய உணவுகள் அடிக்கடி உணவில் இடம் பெறச் செய்வது நல்லது.

ஹலால்(Halal) என்றால் என்ன ??

பொது மக்கள் சிந்தனையில் மிக நீண்ட நாட்களாக ஓடி கொண்டிருக்கும் கேள்வி இது ? பெரும்பாலான அசைவ உணவகங்களில் குறிப்பிட்டிருக்கும் 100 % (ஹலால்) - நம்மவர்கள் பெரும்பாலனவர்கள் நினைப்பது சுத்தம் என்றுதான் . அதன் உண்மை விளக்கம் தான் என்ன வாருங்கள் அலசுவோம் !!!

சுருக்கமாக ஹலால் என்பது கால்நடைகளை அறுக்கும் போது அதன் கழுத்து பகுதி முழுவதும் அறுபடாமல் மூளைக்கு செல்லும் நரம்பு வரை அறுபதால் ,அதன் வலியை உணர்த்தும் நரம்புகள் துண்டிக்க பட்டு வலியை உணராமல் இருக்க செய்வதே ஹலால் ஆகும் . இப்படி அறுக்கும் போது அதன் முழு ரத்தமும் வெளிப்பட்டு ரத்தத்தின் மூலம் நோய் பரவுதல் தடுக்கபடுகிறது. இதற்கு மற்றுமொரு காரணம் இறைவன் அனுமதி படி அறுபது என்பது பொருள்

ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும் விதம்:-

A. கால்நடைகளை அறுக்க பயன்படும் கத்தி அல்லது வாள் மிகக் கூர்மையானதாக இருக்க வேண்டும்.

கால்நடைகள் மிகக் கூர்மையான கத்தி அல்லது வாளால் அறுக்கப்பட வேண்டும். அறுக்கும் போது கால்நடைகள் வலியை உணராதவாறு அல்லது மிகக் குறைவாகவே வலியை உணருமாறு – மிக வேகமாக அறுக்கப்பட வேண்டும்.

B.மேற்படி ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது கழுத்தில் உள்ள மூச்சுக் குழாயும் இரத்தக்குழாயும் ஒரே சமயத்தில் அறுக்கப்பட்டு – கால்நடைகளை உயிரிழக்கச் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது கால்நடைகளின் நரம்பு மண்டலம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும்.

C. அறுக்கப்பட்ட கால்நடைகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழியும்படிச் செய்ய வேண்டும்.

இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்வதன் நோக்கம் ?

அறுக்கப்பட்ட கால்நடைகளின் இரத்தம் – இரத்தக் குழாய்களில் தங்கி கிருமிகள் உருவாகாமல் இருக்க வேண்டியாகும். கால்நடைகளை அறுக்கும் போது தண்டுவடம் துண்டிக்கப்படாமல் இருக்க வேண்டும். தண்டுவடும் துண்டிக்கப்படுவதால் – இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு – இதயம் நின்று போகக் கூடிய நிலை உண்டாகலாம். இதனால் இதயத்தில் உள் இரத்தம் இரத்த நாளங்களில் தங்கிவிடக் கூடும்.

D. கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது இரத்தமே !

கிருமிகளும் – நோய்க்கிருமிகளும் உருவாக காரணமாக அமைவது உடலில் உள்ள இரத்தமே. ஹலால்முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நைடகளின் உடலில் உள்ள இரத்தம் முழுவதும் வழிந்தோடச் செய்யப்படுவதால் நோய்க்கிருமிகள் உருவாவதில்லை.

E. . ஹலால் முறையில் அறுக்கப்படும் கால்நடைகளின் இறைச்சி நீண்ட நேரம் கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சியில் இரத்தம் கலந்து விடாமல் இருப்பதால் – வேறுவிதமாக கொல்லப்படும் கால்நடைகளின் இறைச்சியைவிட ஹலால் முறையில் அறுக்கப்படும் இறைச்சி நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.

F. ஹலால் முறையில் கால்நடைகளை அறுக்கும்போது – கால்நடைகள் வலியை உணர்வதில்லை.

இதன் முறையில் கால்நடைகள் அறுக்கப்படும்பொழுது – கால்நடைகளின் கழுத்து நரம்புகள் மிக வேகமாக அறுக்கப்பட்டு வலியை மூளைக்குக் கடத்திச் செல்லக்கூடிய நரம்பு மண்டலம் துண்டிக்கப்பட்டு விடுவதால் அறுக்கப்படும் கால்நடைகள் வலியை உணர்வதில்லை. இரத்தம் உடலிலிருந்து வெளியேறுவதால் – உடலில் உள்ள சதைப்பாகங்கள் – இரத்தம் இன்றி சுருங்கி விடுவதால் ஏற்படும் மாற்றத்தால் தான் அறுக்கப்பட்ட மிருகங்கள் – துள்ளுவதாகவும் – துடிப்பதாகவும் நமக்குத் தெரிகின்றதேத் தவிர வலியால் அல்ல.

இதை உண்மை படுத்தும் விதமாக ஹலால் முறையில் அறுக்க பட்ட உயிரினமும் ,வேறு விதமாக (தலை துண்டிக்கப்பட்டு ) அறுக்க பட்ட உயிரினங்களை விட ஹலால் கால்நடைகள் மிக குறைந்த (painless dead ) வலியை உணர்வதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது 

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!

சமையலறை பூச்சிகளை இயற்கை முறையில் அழிக்க சில வழிகள்!!!

ஒரு வீட்டின் மிக முக்கியமான பகுதியாக சமையலறை விளங்குகின்றது. வீட்டில் உள்ள விருந்தாளிகள் தங்கும் அறைக்கு நாம் சில நாட்கள் செல்லாமல் இருக்கக்கூடும் அல்லது மிகுந்த குளிர் காலத்தில் வீட்டின் மாடிக்கும் கூட செல்லாமல் இருக்கலாம். ஆனால் யாராலும் சமையலறைக்கு செல்லாமல் இருக்க முடியாது. ஆகையால் தான் வீட்டின் மற்ற பகுதியில் நாம் செலுத்தும் கவனத்தை சமையல் அறையில் சற்றே அதிகமாக செலுத்த வேண்டும். மற்ற அறைகளை போல் இதையும் அழகாக வைக்க வேண்டும்.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட சமையலறை சாதனங்களையும் நவீன கட்டமைப்புடன் சமையல் அறையையும் நாம் அலங்கரிப்பது வீட்டிற்கு மேலும் அழகூட்டும். இவைகளை செய்தால் மட்டும் போதாது, அவற்றை எந்த வித பூச்சிகளும் பாழ்படுத்தாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்கு என்ன செய்வது? பெருமளவில் பணம் செலவு செய்து பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தும் போது அவை பூச்சிகளுக்கு மட்டுமின்றி நமக்கும் அதே அளவு கேடு விளைவிப்பதாக இருக்கின்றன. அப்படி என்றால் நாம் எப்படி இயற்கை முறையில் இத்தகைய பூச்சுகளை தவிர்க்க முடியும் என்று காண்போம்.

சோள மாவு

சோளத்திலிருந்து செய்யப்பட்ட இவை அதிக அளவு உணவு தயாரிப்பில் பயன்படுகின்றது. கிரேவி வகைகள், பஜ்ஜி, போண்டா போன்ற உணவுகளை தயாரிக்க மற்றும் பலவற்றில் இவை பயன்படுகின்றது. ஆனால் இவை எறும்புகளை கொள்ளுவதற்கும் உதவும் என்றும் பலருக்கு தெரியாது. இந்த மாவிற்கு ஒரு இனிப்பு தன்மை உண்டு. சோள மாவு விஷம் கிடையாது. ஆனால் அவைகள் செரிக்க சிறிது காலமாகும். எறும்புகள் இவற்றை உண்டால் அவைகளால் இந்த உணவை செரிக்க முடியாமல் போய்விடும். ஆகையால் சோள மாவு சாப்பிட்ட எறும்பு இறந்து விடும். எறும்பு தனக்கு மட்டுமில்லாமல் தன்னுடன் இருக்கும் சக எறும்புகளுக்கும் இதை கொடுப்பதால் அவையும் உண்டு இறந்துவிடும், சமையல் அறையில் மற்றும் எறும்பு இருக்கும் பகுதியில் இந்த மாவை சிறிதளவு தெளித்து வைத்தால் போதும். உங்கள் நோக்கம் நிறைவேறும்.

பூண்டு

பூண்டின் வாசனையும் அதை உண்டால் நமக்கு கிடைக்கும் சுகாதார பலன்களும் வியப்பூட்டுபவை. இவை எறும்புகளையும் கரப்பான்களையும் இந்த அறைக்குள் வரவிடாமல் தடுக்கும் என்ற விஷயம் நமக்கு தெரியாது. புதிதாக வாங்கிய பூண்டு பற்களை சமையல் அறையை சுற்றிலும் வைத்தால் போதும். இந்த வாசனை தாங்காமல் அவை தங்களுடைய உயிரை காக்க ஓடி விடும். பூண்டு பற்கள் கொஞ்சம் காயும் நிலையில் இருந்தால் வேறு புதிய பற்கள் மாற்றுவது நல்லது. இவை பூச்சிகளை மிரண்டு ஓட வைக்கும். பூண்டை அறைத்து அதில் தண்ணீர், தாது எண்ணைய் மற்றும் சோப் ஆகிய கலவையை தெளிக்கவும் செய்யலாம். இந்த வகை பாதுகாப்பு முறை மிகவும் பயனளிக்கக் கூடியதாக இருக்கும். இந்த பூண்டு ஸ்பிரே உங்கள் சமையலறையை சுத்தமாக வைத்திருக்கவும், சமையலறை தோட்டத்தின் செடிகளை பூச்சிகளிடமிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.

லகிரி தைலம்

யூகலிப்டஸ் மரத்திலிருந்த எடுக்கப்படும் எண்ணையானது மிகுந்த நறுமணம் கொண்ட வாசனை பொருளாகும். இவை பூச்சிகளை கட்டுபடுத்துவதில் சிறந்த பலனளிக்கின்றன. இந்த எண்ணையை சிறிது தண்ணீரில் கலக்கி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அதை அடுப்பறைக்குள் வரும் கரப்பான்கள், சிலந்திகள் மற்றும் சிறிய பூச்சிகள் மீது தெளித்தால் அவை உடனே இறந்து விடும்.

போரிக் அமிலம்

பூச்சிகளை கொல்லும் மற்றொரு வழி போரிக் அமிலமாகும். இதை மாவுடன் சேர்த்து உள்ளே வரும் பூச்சிகள் மேல் தெளித்தால் உடனடியாக அவை இறந்து விடும். இந்த அமிலத்தை அருகில் உள்ள மருந்து கடைகளில் வாங்க முடியும். இது இல்லை என்றால் போரக்ஸ் டிடர்ஜென்ட்டை பயன்படுத்தலாம். இதை நாம் சர்கரை மற்றும் தண்ணீரில் கூட கலந்து பயன்படுத்துவது மிகுந்த பலனளிக்கும். இவை பொதுவாக மக்கள் பயன்படுத்தும் மருந்தாக அமைகின்றது.

யாளி..?

யாளி

யாளி லெமூரிய நாகரீகத்தின் உண்மையான மிருகம் என்று நம்பப்படுகிறது. யாளி என்பது இந்துக் கோயில்களில் காணப்படும் ஒரு கற்பனை உயிரினச் சிற்பமாகும். இது வியாழம், சரபம் எனும் பெயர்களாலும் அறியப்படுகிறது. பொதுவாக இவை இந்துக் கோ...யில்களின் தூண்களில் செதுக்கப்பட்டிருக்கின்றன.

 தென்னிந்தியச் சிற்பங்களில் பரவலாகக் காணப்படும் யாளி இந்துத் தொன்மக்கதைகளில் வரும் சிங்கம் போன்ற ஓர் உயிரினமாகும். இது சிங்கத்தையும் யானையையும் விட மிகவும் வலிமையானது என நம்பப்படுகிறது. பொதுவாக யாளியானது யானையைத் தாக்குவது போன்று சிற்பங்களில் சித்தரிக்கப் படுகிறது.

மதுரை மீனாட்சியம்மன் கோவிலும் வேறு சில முருகன் கோயில்களிலும் கடவுள்களின் (உற்சவர்) சிலைகள் உலா வரும் பொழுது யாளி போன்று வடிவமைக்கப்பட்ட வாகனங்களில் வருவது வழக்கம்.

யாளியின் பூர்விகம்:

யாளி என்கிற, சிங்கமுகத்தில் யானையின் துதிக்கையை நினைவுபடுத்தும் உறுப்புடன் காணப்படும் இந்த விலங்கு இந்தியாவில் கி.மு 25,000 ஆம் ஆண்டுக்குப் பின்னர் வழக்கத்திற்கு வந்தது. தமிழ்நாட்டில் கோயில்கள் செங்கற்களிலிருந்து கருங்கற்களாக மாறத் தொடங்கியது கி.பி 800 -களில். பராந்தக சோழன் மற்றும் ஆதித்த சோழன் காலத்தில் முதன்முதலாகக் கோயில்கள் கருங்கற்கள் கொண்டு கலைநயத்துடன் கட்டப்பெற்றன.


இதனைக் 'கற்றாளி' என்று வரலாற்றாளர்கள் குறிப்பிடுவார்கள். இதற்கு முன் இந்தியக் கோவில்களில் உள்ள சிற்பங்களில், எடுத்துக்காட்டாக மாமல்லபுரம், அஜந்தா, புத்தவிகாரங்கள் போன்றவற்றில் இந்தச் சிற்பத்தினைப் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. இந்தியச் சிற்ப சாத்திரங்களிலும் இதைப் பற்றிக் குறிப்புகள் இல்லை.

யாளி வகைகள்:

யாளிகள் பொதுவாக சிங்கத்தின் உடல் அமைப்பை கொண்டுள்ளன. அவற்றின் தலை வேறு ஒரு மிருகத்தின் சாயலில் வடிவமைக்கபடுகின்றன. யானை, சிம்மம், மகரம் ( ஆடு ) , அரிதாக நாய், எலி போன்றவற்றின் தலைகள் யாளியிடம் காணலாம்.

பொதுவாக யாளியின் முக்கிய வகைகள்

(௧) சிம்ம யாளி

(௨) மகர யாளி

(௩) யானை யாளி

கண்ணீரும் கதைசொல்லும்!

கண்ணீரும் கதைசொல்லும்!

அழுங்கள்! உங்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள் என்கின்றனர் விஞ்ஞானிகள். நம்மால் நம்புவது சற்றுக் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் அதுவே அறிவியல் உண்மையாகவும் இருக்கிறது. அழுவதால் உடலுக்கு நன்மைகளே அதிகம். மாறாக அழுகையை அடக்கிவைத்தல், உணர்ச்சிகளை அழுகையின் மூலம் வெளிக்காட்டாது மறைத்தல் போன்ற செயல்களால் உடலுக்கு நேரும் தீங்குகள் ஏராளம். துன்பங்கள் நேர்கையில் நம் கண்ணீர், கண்களிலிருந்து ஆறாக ஓடாமல் தடுக்கப்படும்போது நம் உடலானது கடுமையாக எதிர்வினையாற்றுகிறது. அது ஏராளமான நச்சு ஹோர்மோன்களைத்(மன அழுத்தத்தைத் தோற்றுவிப்பது) தோற்றுவிக்கிறது. இதனால் உடல் நோய்வாய்ப்படுதல், உடல் பருமனாதல் போன்ற விளைவுகள் ஏற்படுகின்றன.

கண்ணீரின் வகைகள்:

பிரதிபலிப்புக் கண்ணீர்:- 

இது கண்களுக்குள் ஏதாவது விழுந்துவிட்டால் (உதாரணமாக தூசி, அழுக்கான சிறு துணிக்கைகள்) மற்றும் கண்ணில் எரிச்சலை ஏற்படுத்தும் வாயுக்கள் அல்லது அமிலங்கள் (வெங்காயம், கண்ணீர்ப் புகை) கண்களில் புகுந்துவிட்டால், தானாகவே சுரந்து கண்களைக் காக்கும் பணியில் ஈடுபடுகிறது.

உணர்வெழுச்சிக் கண்ணீர்:-

இக்கண்ணீரானது மனிதனின் உளவியல் ரீதியான தாக்கங்களின்போது(கவலை, துன்பம்,ஆனந்தம்) வெளிப்படுவது. இது உலகிலுள்ள அத்தனை மனிதருக்கும் பொதுவானது என்று கருதப்படுகிறது.

கழுவும் கண்ணீர்:- 

இது பிறப்பிலிருந்து இறப்புவரை எம் கண்களை ஈரத் தன்மையுள்ளதாக வைத்திருப்பதற்கு உதவுகிறது. இவ்வாறு ஒரு திரவம் நம் கண்ணில் சேவை புரிந்துகொண்டிருப்பது, நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. அதை உணர வேண்டுமெனில் ஈரமில்லாத, சுத்தமான விரலால் கண்களில் தொட்டுப் பார்த்து(பிசுபிசுப்பை) அறிய முடியும்.

அழுகையில்:

நாம் சிரிக்கும்போது எவ்வளவு சக்தியைச் செலவு செய்கிறோமோ(நிமிடத்திற்கு 1,3 கலோரிகள்) அதேயளவு சக்தியை, அழும்போதும் செலவு செய்கிறோம். அழுவதை விட சிரிப்பது உடலுக்குச் சிறந்தது என்று யார் சொன்னது?

கண்களில் 'பீளை' உருவாகுதல், அழுததால் கண்கள் வீங்குதல், கண்கள் சிவத்தல் எல்லாமே கண்கள் தம்மைக் காத்துக்கொள்ள, தாமாகவே(automatic) எடுக்கும் முயற்சியாகும்.
அழுகை மட்டும் இல்லாது போயிருந்தால், தன் கைக்குழந்தைக்குப் பசி எடுப்பதைத் தாயால் எப்படி உணர முடியும்?

நாம் துன்ப, துயரமான சூழ்நிலைகளில் அழாமல் அடக்கி வைக்கும்போது எங்கள் உடலானது, கூடிய விரைவில் நோய்வாய்ப்படுவதற்கு வாய்ப்புள்ளது, நாம் கவலையடையும்போது எமது உடலானது அதிக அளவில் அழுத்த, நச்சுக் ஹோர்மோன்களை உற்பத்தி செய்கிறது, நாம் அழும்போது இக் ஹோர்மோன்கள் உடலிலிருந்து கண்ணீருடன் சேர்ந்து வெளியேறிவிடுகின்றது. இவ்வாறு அழாமல் தேக்கி வைக்கும் ஹோர்மோன்கள் உடலுக்கு ஆபத்தானவையாகும். இவை மன அழுத்தம், பலவித வாத, நரம்பு நோய்கள், உடல் பருமன் போன்றவற்றை ஏற்படுத்துகின்றன.

விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

விச உயிரினங்கள் கடித்து விட்டதா...?!

அதற்கான முதல் உதவி:

மருத்துவரை உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே, கீழ்க்கண்ட அவசர மருத்துவத்தை பின்பற்றவும்.

பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்.

கண்ணாடி விரியன்:-

 பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.

நல்ல பாம்பு:- 

வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.

தேள்:- 

கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.

வண்டு:- 

கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவர்.

சிலந்தி:-

ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்து கடிவாயில் கட்டவும்.

வெறிநாய்:- 

மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.

எலி:-

 வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.

பூனை:- 

தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.

பூரான்:-

 பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.

நட்டுவாக்காலி:- 

கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

இது அவசர உதவி மட்டுமே பின் வைத்தியரை நாடவும்.

தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத தகவல்களும்!

தெரிந்த விஞ்ஞானமும் - தெரியாத
தகவல்களும்

1. உலகத்தின் 97.2% தன்ணீர்
உப்புத்தண்ணீர்
என்பது உங்களுக்கு தெரியுமா?

2. சூரியன் வெளிச்சம்
பூமிக்கு வந்தடைய 8.30
நிமிஷங்கள் ஆகின்றன.

3. கோகோ கோலாவின் ஒரிஜினல்
பாட்டிலின்
கலர் பச்சை.

4. மனித வயிற்றில் இருக்கும்
பெரும் பாகங்களை எடுத்துவிட்டால்
கூட உயிர் வாழலாம்.

உதாரணத்திற்க்கு ஒரு லங்க்ஸ் /
ஒரு கிட்னி, ஸ்ப்ளீன், 75% லீவர், 80
இன்டன்ஸடைன், இவையெல்லாம்
எடுத்தால் எத்தனை வருடம்
வேண்டுமானாலும் உயிர் வாழலாம்.

5. பட்டுபூச்சிக்கு 11 மூளைகள்.
அட்டைப்பூச்சிக்கு 32 மூளைகள்.

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை!

வேகத் தடைகள் இன்றி அதிவேக இண்டர்நேர்ட் பயன்படுத்தும் முறை

எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.

இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.

சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும்.

 இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்

'மாலிபவுல்' - விநோதமான பறவை!

ஆஸ்திரேலியாவின் 'மாலிபவுல்' என்னும் பறவை ரொம்ப விநோதமானது. இந்தப் பறவைக்கு பெற்றோர் யார் என்றே தெரியாது. ஏனெனில், தாய்ப்பறவை முட்டைகளை மண்ணுக்குள் போட்டு மூடி வைத்து விட்டு சென்று விடும்.

குஞ்சுகளோ பொரிந்து வெளியே வந்தவுடன் அப்படியே பறக்க ஆரம்பித்து விடும். அந்த அளவிற்கு அதற்கு இறகுகள் வளர்ந்து விடுகின்றன. இதனால் அதன் பெற்றோர் யாரென்றே அந்தப் பறவைக்கு தெரிவதில்லை. தாய் பறவையும் தனது முட்டைகளிலிருந்து குஞ்சுகள் வந்ததா என்று காண வருவதில்லை. பொறுப்பில்லாத மம்மி.

இந்தப் பறவை பற்றிய இன்னொரு விசேஷமான தகவல். பிறந்த நாளிலேயே பறக்கும் ஒரே பறவையும் இதுதான்.

நட்சத்திரங்களின் அழிவால் தங்கம் உருவானது..?

நட்சத்திரங்களின் அழிவால் தங்கம் உருவானது

நம் பூமியில் கிடைக்கும் தங்கமானது ஒரு காலத்தில் மிகுந்த அடர்த்தி வாய்ந்த நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டு அழிந்ததால்தான் தங்கம் உருவானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மேலும்,

காமா கதிர்வீச்சு வெடிப்பு போன்ற ஒன்று தான் தங்கம் உருவாக காரணம் என்று கூறுகின்றனர்.

2 பெரிய நியூட்ரான் நட்சத்திரங்கள் மோதலால் தான் தங்கம் உருவாக காரணம் என்பது ஆய்வாளர்களின் கருத்தாகும்.

இந்த நியூட்ரான் நட்சத்திரங்களின் மோதலால் ஏற்பட்ட தங்கத்தின் எடை 10 நிலவுகளின் எடைக்கு சமமானது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.