Tuesday 25 March 2014

தலைவா! மறக்க முடியாத 10 நாட்கள் - விஜய் பேச்சு!


தலைவா திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் விஜய் இயக்கியுள்ள திரைப்படம் ‘சைவம்’. நாசர் மற்றும் பேபி சாரா(நிலா) முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் இத்திரைப்படத்தில் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடிக்கின்றனர்.


இயக்குனர் விஜய் அளித்த பேட்டியில் ”சைவம் திரைப்படத்தில் சாராவும், நாசரும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். சைவம் திரைப்படத்தில் எனது மிகப்பெரிய குறிக்கோள், ரசிகர்கள் இத்திரைப்படத்தைப் பார்த்த பிறகு நிலாவை மறந்துவிட்டு தமிழ் என்ற பெயரை தான் நியாபகம் வைத்துக்கொள்ளவேண்டும். சாரா தமிழ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.


காரைக்குடியில் நடக்கும் ஊர்த்திருவிழாவிற்குச் செல்கிறது தமிழின் குடும்பம். அங்கு என்ன நடக்கிறது என்பது தான் கதை. சைவம் திரைப்படம் தலைவாவிற்கு முன்பே எடுக்கப்படவேண்டிய படம். நடிகர் விஜய் கேட்டுக்கொண்டதற்காக சைவம் திரைப்படத்தை தள்ளிவைத்துவிட்டு தலைவா எடுத்தேன்.


தலைவா படத்திற்கு ஏற்பட்ட பிரச்சனையினால் ஏற்பட்ட வலி சாதாரணமானது அல்ல. காலை பல கனவுகளுடன் தூக்கத்திலிருந்து எழுந்து இரவு வலியுடன் உறங்கச் செல்வது ஒப்புக்கொள்ளமுடியாதது. என் திரையுலக வாழ்க்கையின் மறக்க முடியாத 10 நாட்கள் என்றால் தலைவா பிரச்சனை நடந்த அந்த கால கட்டம் தான்” என்று கூறினார்.


சைவம் என்று டைட்டில் வைத்துவிட்டு போஸ்டரில் சேவலின் படத்தை வைத்திருப்பதும், நாசர், சாரா என ‘தெய்வத்திருமகள்’ கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதும் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உண்மையாவா…!


வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்குப் பிறகு பொன்ராம் இயக்கும் படம் ‘ரஜினி முருகன்‘. இதில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கிறார்.


சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மான் கராத்தே‘ படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டுவிழா சிறப்பாக நடந்தது.



அனிருத் இசையமைத்திருக்கும் பாடல்கள் மற்றும் டிரைலர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. தற்போது சிவகார்த்திகேயன் ‘எதிர்நீச்சல்’ பட இயக்குநர் துரைசெந்தில்குமார் இயக்கும் ‘டாணா‘ படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.



‘டாணா’ படம் முடிந்த உடன் ‘ரஜினி முருகன்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கிறாராம்.



இதைப் பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Friday 21 March 2014

மணமகள் அலங்காரம் எப்படி இருக்க வேண்டும்!


மணமகள், "மேக்கப்’ இயற்கையாகவும், சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருப்பதுடன், முகத்தில் உள்ள புள்ளிகள், பருக்களின் வடு, தோலில் இருக்கும் சுருக்கங்கள் தெரியாதவாறு மறைத்து விட வேண்டும். இவ்வாறு செய்யும் போது, முகம் பளபளப்பாகவும், மிகுந்த பொலிவுடனும் காணப்படும். அதே நேரம், அழகுப் பொருட்கள் தோலில் அதிக நேரம் இருப்பதால், அலர்ஜி மற்றும் பாதிப்பு வராமல் இருப்பதற்கு, தரமான அழகுப் பொருட்களையே உபயோகிக்க வேண்டும். மேலும், முகத்தில் உள்ள மேடு, பள்ளங்களை கவனித்து மேக்கப் போடுவது மிகவும் அவசியம்.


மணப்பெண் சிகை அலங்காரம், மற்றொரு முக்கியமான பகுதி. மணப்பெண்ணுக்கு ஹேர் ஸ்டைல் செய்யும் முன், முன் பகுதியை அழகுபடுத்துவது மிக முக்கியம். பெண்களில் சிலருக்கு நீண்ட தடிமனான முடி இருக்கும். அவர்களுடைய முக வடிவத்துக்கு ஏற்ப, சிகை அலங்காரம் செய்திட வேண்டும். சிலருக்கோ முடி குறைவாக இருக்கும். அவர்களுக்கு தகுந்தபடி முன் பகுதியை சரி செய்யும் விதமாக, ஹேர்ஸ்டைல் செய்வது மிக முக்கியம். மணப்பெண்ணின் உயரம், பருமன் ஆகியவற்றை கணக்கிட்டு, முடி அலங்காரம் செய்ய வேண்டும்.


குட்டையான கழுத்துள்ள பெண்களுக்கு, சற்றே தூக்கியவாறு உள்ள கொண்டையும்,


நீளமான கழுத்துள்ள பெண்களுக்கு, கழுத்தை மூடிய அளவுக்கு இறங்கும் கொண்டையும் போடுவது அழகாக இருக்கும்.


முகம் நீளமாக இருந்தால், காதுகளை மூடியும், இரண்டு பக்கத்திலும் சிறிது முடியை, சுருள் செய்து தொங்கவிடலாம். இது, முகத்தை அகலமாக காட்டும். அகலமான முகம் உடையவர்களுக்கு, முகத்தின் முன் பக்க முடியை தூக்கி காட்டுவதன் மூலம், முகத்தை உருண்டையாக காட்ட முடியும். இதில், முகத்தின் முன்பகுதி அமைப்புக்கு ஏற்ப, மொத்த முடியையும், பின் நோக்கி இருப்பது போல், பின்பக்கமாக சீவுவதோ அல்லது நடு வகிடு எடுத்து, இரண்டு புறமும் பின்புறமாக சீவி, முகத்தின் வடிவத்துக்கேற்றாற் போல் உயர்த்தி காட்டலாம்.


நடுவில் வகிடு இருக்கும் இடத்தில், அழகிய நெற்றிச் சுட்டியை வைக்கலாம். இதில், இன்னொரு முறையும் உள்ளது. அது, காதின் ஒரு பக்கத்தில் இருந்து, மறு பக்கத்துக்கு பின்புறமாக தலை சீவ வேண்டும். இதில், நெற்றிச்சுட்டி வைக்க முடியாது. இந்த மாதிரி முன்புறம் சரி செய்யும் போது, முன் நெற்றியில் ஒட்டிக் கொள்ளும் சுட்டி கிடைக்கிறது. அவற்றை வைத்தும் பொருத்திக் கொள்ளலாம்.


மாலை, ரிசப்ஷன் அலங்காரத்தில், கொண்டை விரும்பாதவர்கள், பின்னல் வேண்டும் என்பவர்கள் பிரெஞ்ச் பிளேட் போட்டு, பின்னலை பின்னி விட வேண்டும். அக்காலத்தில், மணப் பெண்ணிற்கு, பூக்கள் மூலம் ஜடை செய்வர். ஆனால், இப்போதோ, பின்னலின் மேல் ஜரிகை, முத்து, பூக்கள் மற்றும் கற்களால் செய்யப்பட்ட மோடிவ் ஆகியவைகளை கொண்டு அலங்கரிக்கலாம்.

Thursday 20 March 2014

நயன்தாராவுடன் இணையும் தமன்னா..அக்கா?


ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, சந்தானம், நயன்தாரா உட்பட பலர் நடித்த படம் 'பாஸ் என்கிற பாஸ்கரன்'. இப்படம் வெளியாகி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.


இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். இப்படத்தின் வெற்றி இயக்குநர் ராஜேஷையும் கவனிக்கத்தக்க வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது.


இப்பட வெற்றி காரணமாக படத்தின் தயாரிப்பாளாரான உதயநிதி, தன்னை வைத்து 'ஒரு கல் ஒரு கண்ணாடி' இயக்கும் வாய்ப்பை இயக்குநர் ராஜேஷுக்கு அளித்தார்.


தற்போது 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க முடிவு செய்திருக்கிறார் ராஜேஷ். முந்தைய பாகத்தில் நடித்த ஆர்யா, நயன்தாரா உடன் இரண்டாம் பாகத்தில் தமன்னாவும் இணைகிறார்.


மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

விஜய்யுடன் நடிக்க ஆசைப்படும் த்ரிஷா..!


பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவின் கனவுக்கன்னிகளில் ஒருவர் த்ரிஷா. “என்றென்றும் புன்னகை’ மூலம் இளைஞர்களின் மனதை மறுபடியும் ஒரு முறை கொள்ளையடித்த திரிஷாவுடன் ஒரு சந்திப்பு.

பத்து வருடங்களுக்கு மேலாக வெற்றிகரமான ஹீரோயின். எப்படி உணர்கிறீர்கள்?

நேற்று நடிக்க வந்தவள் போலவே உணர்கிறேன். “மெüனம் பேசியதே’யில் நாயகியாக நடிக்க ஆரம்பித்ததில் இருந்து பதினோரு வருடங்கள் முடித்து பன்னிரண்டாவது வருடத்தில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். நேற்றுதான் “மெüனம் பேசியதே’யில் நடித்தது போலிருக்கிறது. பதினோரு வருடங்கள் சீக்கிரமாகக் கடந்துவிட்டதை நம்பமுடியவில்லை. எந்த ஒரு படம் நடிக்கும் போதும் முதல் படம் போலவே உணர்ந்து நடிப்பது எனது ஸ்பெஷல் என நினைக்கிறேன். பெரிதாக சாதித்த உணர்வு, வீண் பெருமிதம் எல்லாம் இல்லை. ஆனால், சந்தோஷமாக உணர்கிறேன். நடிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன்.

தமிழ் சினிமாவில் உங்களுக்கு ஒரு சிறு இடைவெளி விழுந்து விட்டதே… தமிழ் சினிமாவை வேண்டுமென்றே நீங்கள் தவிர்ப்பதாக சில வதந்திகள் உங்களைச் சுற்றி இருப்பது தெரியுமா?

தமிழ் சினிமாவை நான் நேசிக்கிறேன். இந்த இடைவெளி எதேச்சையாக விழுந்த ஒன்று. “சமர்’ “என்றென்றும் புன்னகை’ இடையேயான ஒரு வருடம் பெரிய இடைவெளி போல என் ரசிகர்களை உணரவைத்திருப்பதை நான் புரிந்து கொள்கிறேன். நான் தமிழ் சினிமாவைத் தவிர்ப்பதாகவோ, தமிழ் சினிமாவில் எனக்கு வாய்ப்புக்கள் இல்லை என்று வருகின்ற செய்திகள் எல்லாம் வெறும் வதந்திகள். ரசிகர்கள் என்னை நம்பத்தயாராக உள்ளனர். ஆனால், மீடியா என்னை நம்பத் தயாராக இல்லை.

இளம் ஹீரோக்களுடனும், வயதான ஹீரோக்களுடனும் பெருமளவில் நடித்துள்ளீர்கள். இவர்களிடையே ஏதாவது வித்தியாசத்தை உணர்கின்றீர்களா?

வித்தியாசம் பெரிதாக இல்லை. ஆனால், ஒற்றுமை என்னவென்றால் அனைவருமே கடின உழைப்பாளிகள். செய்யும் தொழிலுக்கு நேர்மையானவர்கள். ஒரே ஒரு வேறுபாடு, வயதான நடிகர்களுக்கு அனுபவம் அதிகம். அவர்களுக்கு சினிமா சார்ந்த புரிதல் அதிகம். அதற்காக இளைய நடிகர்கள் வயதான நடிகர்களை விட எந்த விதத்திலும் குறைந்தவர்களல்ல. நான் எந்த நடிகருடனும் நடிக்கத் தயாராக உள்ளேன். வயதிற்கும் நடிப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.

விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் இவர்களின் வளர்ச்சியை ஒரு அனுபவ நடிகையாக எப்படிப்பார்க்கிறீர்கள்?

ரொம்ப பிரமிப்பா இருக்கு. இவர்களின் அனைத்துப் படங்களையும் பார்த்தேன். அற்புதமா பண்றாங்க. அவர்களின் கதைத்தேர்வு, நடிப்பு என அனைத்துமே அற்புதம். ஒரு நடிகனின் பலமே தனக்கு தகுந்த கதாபாத்திரத்தைத் தேர்ந்தெடுப்பதிலும், தனக்கு எது சரியாக வரும், எது சரியாக வராது என அறிந்து கொள்வதிலும் தான் உள்ளது. விஜய் சேதுபதியும், சிவகார்த்திகேயனும் இந்த விஷயத்தில் பிரமிக்கத்தக்க வகையில் இருக்கிறார்கள். அவர்களுடன் சேர்ந்து நடிக்க ஆவலாக உள்ளேன்.

சினிமா வாழ்க்கையில் உங்களின் நிறைவேறாத ஆசை ஏதாவது உண்டா?

சில வாய்ப்புகளை நான் பயன்படுத்தியுள்ளேன். சில வாய்ப்புகளை நான் பயன்படுத்தவில்லை. அதற்கு பல காரணங்கள் உண்டு. சில நிறைவேறாத ஆசைகள் உண்டு. அதை வெளியில் சொல்ல விரும்பவில்லை.

இன்னும் எத்தனை வருடங்கள் சினிமாவில் இருப்பதாக உத்தேசம்?

நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் சில பரீட்சார்த்தமான படங்கள் செய்ய விரும்புகிறேன். மசாலாப்படங்கள் போதும் போதும் என்கிற அளவிற்கு செய்தாகிவிட்டது. நடிப்பிற்குத் தீனி போடக் கூடிய சிறந்த படங்களை எதிர்பார்த்திருக்கிறேன். எது எப்படியோ நடித்துக்கொண்டிருப்பேன் என்பது மட்டும் உண்மை.

இப்போதுள்ள நடிகைகளில் உங்களுக்குப் பிடித்தவர்?

எல்லோருமே அற்புதமான பெண்கள். இப்போதுள்ள இளம் நடிகைகள் யாருக்குமே வெட்டிபந்தாவோ, வீண் பேச்சுக்களோ இல்லை. தமது கிரீடங்களை கழற்றி வைத்துவிட்டு மிக இயல்பாக இருக்கிறார்கள். நாங்கள் எப்போதாவது தான் சந்திப்போம். சந்திக்கும் வேளைகளில் ஜாலியாக இருப்போம். தமன்னா, காஜல், அனுஷ்கா, நயன் ஆகியோர் என் நெருங்கிய தோழிகள். என்னால் எல்லோருடனும் பழக முடியும் என்பதால் அனைவருமே என்னை நேசிக்கிறார்கள் என நினைக்கிறேன். நானும் அவர்களை நேசிக்கிறேன். எந்த ஈகோவும் இல்லாமல் சகோதரிகள் போலப் பழகுவோம். சந்திக்கும் வேளைகளில் சினிமா பற்றி பேச மாட்டோம். ஜாலியாகவும் கேலியாகவும் கல்லூரி மாணவிகள் சந்தித்துக்கொண்டால் பேசிக்கொள்வதுபோலத்தான் பேசுவோம்.

உங்களைச் சுற்றியுள்ள இந்த மில்லியன் டாலர் கேள்வியை கேட்டுத்தான் ஆக வேண்டும். கல்யாணம் எப்போது?

கல்யாண நேரம் வரும் போது கண்டிப்பாக நடக்கும்

சிவகார்த்திகேயன் – ஆண்ட்ரியா நடிக்கும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2.!


நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது கோலிவுட்டில் குறிப்பிட்டு சொல்லும்படியான நடிகராக வளர்ந்துவிட்டார்.


ஒரு முன்னணி நடிகருக்கு உண்டான மரியாதை இப்போது சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர்கள் கொடுத்து வருகின்றனர்.


இவர் நடித்த மான் கராத்தே ரூ.18 கோடிக்கு வியாபாரம் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது ‘தாணா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி வருத்தப்படாத வாலிபர் சங்கம் இயக்குனர் பொன்ராம் அவர்களின் அடுத்த படத்திலும் சிவகார்த்திகேயனே நடிக்கிறார்.


இந்த படத்திற்கு ரஜினி முருகன்” என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.


 இந்த படத்திலும் சூரி முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.


இந்த படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பார்ட் 2 என்றும் கூறப்படுகிறது.


ரஜினி முருகன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா மற்றும் ப்ரியா ஆனந்த் ஆகியோர்கள் நடிக்கிறார்கள்.


முந்தைய படம் போல முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாக்க உள்ளனர். மற்ற தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடந்து வருகிறது.

ஹன்சிகா படம் பணால்..!


ஹன்சிகா நடிப்பதாக இருந்த படம் கைவிடப்பட்டது. சமீபத்தில் ட்ராப்பான இரண்டாவது படம் இது.


சிம்பு, ஜெய், தீக்சா சேத்துடன் ஹன்சிகா நடித்த படம் வேட்டை மன்னன். நிக் ஆர்ட்ஸ் சக்ரவர்த்தி தயாரித்த இந்தப் படம் படப்பிடிப்பு சில வாரங்கள் நடந்த பின் கைவிடப்பட்டது. மீண்டும் வேட்டை மன்னனை தூசு தட்டும் எண்ணம் யாருக்கும் இல்லை.


தற்போது தெலுங்கிலும் ஹன்சிகா நடிப்பதாக இருந்த ஒரு படம் கைவிடப்பட்டுள்ளது.


தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் துர்கா படத்தில் ஹன்சிகா ஒப்பந்தமானார். படத்தின் இயக்குனர் ஸ்ரீனிவாச ரெட்டி.


படப்பிடிப்புக்கு கிளம்ப இருந்த நேரம் இயக்குனருக்கும், நாக சைதன்யாவுக்கும் முட்டிக் கொண்டது. இயக்குனரை மாற்றினால்தான் படத்தில் நடிப்பேன் என்று அடம்பிடித்தார் நாக சைதன்யா.


தயாரிப்பாளருக்கு ஸ்ரீனிசார ரெட்டியின் கதையும் முக்கியம் ஹீரோ நாக சைதன்யாவின் கால்ஷீட்டும் முக்கியம்.


இந்த இருவரும் சமாதானத்துக்கு உடன்பட மறுக்க படத்தையே ட்ராப் செய்துவிட்டார் தயாரிப்பாளர். ஹன்சிகாவுக்கு இது பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.