Tuesday 11 March 2014

கோச்சடையானைப் பார்த்து வியக்கப் போகிறார் - ஜேம்ஸ் கேமரூன்! ஏற்பாடுகள் தயார்!


ஹாலிவுட் திரையுலகில் பல புதுமைகளை நிகழ்த்தியவர், நிகழ்த்திக் கொண்டிருப்பவர். எல்லோரும் லைவ் ஆக்ஷன் படம் எடுத்துக் கொண்டிருந்தபோது, இவர்தான் அவதாரில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பம் எனும் உத்தியைப் பயன்படுத்தி வேற்றுக் கிரகவாசிகளை உருவாக்கி 3 டியில் காட்டி அசர வைத்தார்.


இன்று அந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் முதல் படத்தை ரஜினியை வைத்து எடுத்திருக்கிறார் சவுந்தர்யா ரஜினிகாந்த். கோச்சடையானை 3டிக்கு மாற்றும் பணிகள் நடந்து வருகின்றன.


 இந்த வேலைகள் முடிந்ததும், மார்ச் 20-ம் தேதி சென்சாருக்கு அனுப்பப்படுகிறது.


 இதற்கிடையில் இந்தப் படத்தை ஜேம்ஸ் கேமரூனுக்கு போட்டுக் காட்டும் முயற்சிகளில் இறங்கியுள்ளார் சவுந்தர்யா. இது ஏதோ விளம்பரத்துக்காக அவர் அறிவித்ததல்ல.


 நிஜமாகவே இதற்கான முயற்சிகளில் இறங்கியுள்ளார். ரஜினியின் கோச்சடையான் சிறப்புக் காட்சி பார்க்கிறார் ஜேம்ஸ் கேமரூன்!


கோச்சடையான் ரூ 1500 கோடியில் அவதாரையும், டின்டின்னையும் ஹாலிவுட்டில் உருவாக்கினார்கள்.


ஆனால் சவுந்தர்யாவோ ரூ 125 கோடியில் கோச்சடையானை உருவாக்கியுள்ளார்.


பத்தில் ஒரு பங்கு கூட பட்ஜெட் இல்லை.


ஆனால் சர்வதேச தரத்தில் கோச்சடையான் உருவாக்கப்பட்டுள்ளது.


இந்தத் தகவல்களைக் கேள்விப்பட்ட ஜேம்ஸ் கேமரூன் இந்தப் படத்தைப் பார்க்க இசைவு தெரிவித்துள்ளார்.


 விரைவில் இந்தப் படத்தை அவருக்கு திரையிட்டுக் காட்டுவேன் என சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.

உங்களுக்கு முடியாது சிவகார்த்திகேயனுக்கு பண்ணலாம்: தனுசுக்கு புரிந்த நிஜம்!

தனுஷ் தயாரித்து நடித்துக் கொண்டிருக்கும் படம் வேலையில்லா பட்டதாரி. கிட்டதட்ட படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.


இந்த படத்திற்காக அண்மையில் சில கோடிகள் பைனான்ஸ் தேவைப்பட்டதாம் தனுசுக்கு. விநியோகஸ்தர்களிடம் கேட்டுபார்க்கலாம் என்ற நம்பிக்கையில் போன் போட்டவருக்கு பணம் இல்லை என்று அவர்கள் சொல்லியிருந்தால் கூட  பரவாயில்லை.


அவர்கள் சொன்ன பதிலால் தனுஷ் நிலை குலைந்தாராம். சார் நீங்க தயாரிச்சு சிவகார்த்திகேயன் நடிக்கிற டாணா படத்துக்கு வேணும்னா எத்தனை கோடி வேணும்னாலும் தர்றோம்.


ஆனால் நீங்க நடிக்கிற வேலையில்லா பட்டதாரிக்கு எங்களால் பணம் தர முடியாது என்றார்களாம்.


தமிழ்சினிமாவில் தன்னோட இடம் எங்கே போய்கொண்டிருக்கிறது என்பதை சற்று தாமதமாக புரிந்து கொண்டாராம் தனுஷ்.  


 இருந்தாலும் தன் நண்பன் நல்ல இடத்திற்கு உயர்ந்துள்ளாரே என்று சந்தோஷப்பட்டதோடு இல்லாமல் வேலையில்லா பட்டதாரி படத்தில் ஒரு பாடலில் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் தோன்றி ஆடப் போகிறாராம்.

கோச்சடையான் விழாவுக்கு கமல்ஹாசன் ஏன் வரவில்லை?

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட ரஜினிகாந்த் நடித்த ‘கோச்சடையான்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது.


விழாவில் திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக ஷாருக்கான் கலந்து கொண்டார். விழா முடிந்த பின்னர் செய்தியாளர்களுக்கு இயக்குனர் செளந்தர்ய ரஜினிகாந்த் பேட்டியளித்தார். ஆனால் ரஜினியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான கமல் ஹாசன் விழாவிற்கு வரவில்லை.


இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின் போது ரஜினியின் மகள் சௌந்தர்யாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதில், மும்பையிலேர்ந்து நட்சத்திரங்களை இந்த பாடல் வெளியீட்டு விழாவுக்கு வரவழைச்சிருந்தீங்க.


ஆனால் உங்கள் அப்பாவின் நண்பரான கமல் சார் வரலையே? என்ற கேள்விக்கு கமல் சார் வரணும்னு நான் ரொம்ப ஆசைப்பட்டேன். ஆனால் அவர் ‘உத்தமவில்லன்’ படப்பிடிப்பில் இருந்ததால் வர முடியவில்லை என்றார்.


தொடர்ந்து, கோச்சடையான் விளம்பரங்களில் வைரமுத்துவின் பெயருக்கு பிறகு வாலி பெயர் வந்திருக்கே? இந்த கேள்விக்கு சௌந்தர்யாவின் பதில் இதோ, படத்தில் ஒரே ஒரு பாடல்தான் வாலி சார் எழுதியிருக்கார். மற்ற எல்லா பாடல்களும் வைரமுத்து சார்தான் எழுதியிருக்கார். அதனால்தான் அவர் பெயரை பின்னால் போட வேண்டியதாகிவிட்டது என்று கூறினார்.


உடனே அவரிடம் வாலி சீனியராச்சே? என கேள்வி எழ திரும்பவும் அதே பதிலை ரிப்பீட் செய்தார். மேலும் இதில் வாலியை சிறுமைப்படுத்தும் எண்ணம் சிறிதும் எங்களுக்கு இல்லை என்றும் கூறினார்.  

சிவகுமாருக்கு சவாலாக அமைந்த `காரைக்கால் அம்மையார்' படம்!


சிவகுமாரின் திறமைக்கு சவாலாக அமைந்த படம் "காரைக்கால் அம்மையார்.''

இதில் அவர் சிவனாகவும், ஸ்ரீவித்யா பார்வதியாகவும் நடித்தனர்.

காரைக்கால் அம்மையாராக வேடம் ஏற்றவர், கே.பி.சுந்தராம்பாள்,

`தகதகதக தகதக என ஆடவா...
சிவசக்தி சக்தி சக்தியோடு ஆடவா...?

என்று உணர்ச்சியோடும், வேகத்தோடும் பாட, சிவகுமாரும், ஸ்ரீவித்யாவும் துரிதகதியில் வேகமாகச் சுழன்று சுழன்று ஆடவேண்டும்.

64 வயதான கே.பி.சுந்தராம்பாள் 6 நிமிடப் பாடலை தமது வெண்கலக் குரலில் ஒரே மூச்சில் பாடி முடித்தார்.

ஸ்ரீவித்யா குழந்தைப் பருவத்தில் இருந்தே நடனத்தை முறையாக கற்றவர். பார்வதியாக நடனம் ஆட அவர் தயார் நிலையில் இருந்தார். ஆனால் சிவகுமாரால் அவருக்கு ஈடு கொடுத்து ஆடமுடியுமா?

கே.பி.சுந்தராம்பாளுக்கே இந்த சந்தேகம் ஏற்பட்டது.

"ஏ.பி.என்! இந்தப் பையன் டான்சரா? நன்றாக ஆடுவானா? பாட்டு ரொம்ப வேகமாக இருக்கிறதே. புதுப்பையனை நம்பி இருக்கிறாயே!'' என்று ஏ.பி.நாகராஜனிடம் கூறினார், கே.பி.சுந்தராம்பாள்.

"கவலைப்படாதீங்க! அவங்க ஆடும்போது, நீங்களும் நடிக்கத்தானே போறீங்க அப்ப பாருங்க!'' என்று தன்னம்பிக்கையோடு ஏ.பி.என். பதிலளித்தார்.

பிறகு சிவகுமாரை அழைத்தார். "நடனத்துக்கே அரசனான நடராஜன் வேடத்தை உங்களுக்கு கொடுத்திருக்கிறேன். ஐந்து வயதில் இருந்து 15 வருடமாக நடனம் ஆடிக்கொண்டிருக்கும் ஸ்ரீவித்யாவை நீங்க பீட் பண்ணணும். ஒரு வாரம் டைம் தருகிறேன். நல்லா ஒத்திகை பாருங்க'' என்று கூறினார்.

நடனமேதை "பி.எஸ்.கோபாலகிருஷ்ணன், நடனத்தை அமைத்துக்கொடுக்க, அவரது உதவியாளர் விமலா, சிவகுமாருக்கு பயிற்சி அளித்தார்.

ஒவ்வொரு நாளும் கடுமையான பயிற்சி பெற்றார், சிவகுமார்.

ஆறு நிமிடப் பாடல் காட்சியை 7 நாட்கள் படமாக்கினார்கள். தினமும் 12 மணி நேரம் படப்பிடிப்பு நடந்தது.

சிவகுமாரும், ஸ்ரீவித்யாவும் போட்டி போட்டு ஆடினார்கள். சிவகுமார் தலையில் அணிந்துள்ள ஜடாமுடிக்குள் இருந்து, வியர்வை அருவிபோல் கொட்டும். கைகளில் இறுக்கிக் கட்டப்பட்ட நகைகள் ரத்த ஓட்டத்தை தடை செய்யும். காலில் சலங்கைகள் மோதி மோதி ரத்தம் வடியும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஆடினார்.

சிவகுமாரின் சிவதாண்டவத்தை பார்த்த படப்பிடிப்புக் குழுவினர் அசந்து போனார்கள். குறிப்பாக கே.பி.சுந்தராம்பாள், "நீ எப்படி ஆடுவாயோ என்று பயந்து போயிருந்தேன். என் வயிற்றில் பால் வார்த்து விட்டாய்!'' என்று வாழ்த்தினார்.

சிவகுமார் நடித்த "திருமலைத் தெய்வம்'' என்ற படம் 1973-ல் வெளிவந்தது.

இதில் சிவகுமார் திருமாலாகவும், ஸ்ரீவித்யா மகாலட்சுமியாகவும், ஏவி.எம்.ராஜன் நாரதராகவும் நடித்தனர்.

சிவகுமார் கடைசியாக நடித்த புராணப்படம் "கிருஷ்ணலீலா.'' 1977-ல் இப்படம் வெளிவந்தது.

இதில் சிவகுமாரும், ஜெயலலிதாவும் நடித்தனர். ஏ.பி.நாகராஜன் டைரக்ட் செய்திருந்தார்.

இந்தப்படம் பற்றி சிவகுமார் கூறியதாவது:-

"புராணப்படங்களில் கடைசியாக நான் பங்கு கொண்ட படம், `கிருஷ்ணலீலா.' படப்பிடிப்பு துவங்கிய வேகத்தில் படம் முடிக்கப்படவில்லை. தயாரிப்பாளர்கள் மாறினார்கள். அதனால் படம் வெளிவர நீண்ட காலம் ஆயிற்று. கால இடைவெளியில் ரசனையும் மாறிவிட்டது.

ஏபி.என்., இறப்பதற்கு முன் எவ்வித குறையும் வைக்காமல் படத்தை முடித்துக் கொடுத்திருந்தார். பத்திரிகையாளர் காட்சிக்கு நான் ஏற்பாடு செய்து, படம் பற்றி முறையான விமர்சனம் வெளிவர வழி செய்தேன்.

என்ன செய்தும், சென்னையிலும், வெளியூர்களிலும் மூன்றாவது வாரம் ஓடவே படம் திணறியது. புராணப் படங்களின் சீசன் முடிந்து, அடுத்த சீசன் தொடங்கி விட்டது என்பதை புரிந்து கொண்டேன்.

இதன் பிறகும் புராணப் படங்களில் நடிக்க எனக்கு அழைப்புகள் வந்தன. அவை அனைத்தையும் நிராகரித்து விட்டேன். இனி புராணப் படங்களில் நடிப்பதில்லை என்று தீர்மானித்தேன். "கிருஷ்ணலீலா'' வியாபார ரீதியில் அடைந்த தோல்விதான், நான் இந்த முடிவை எடுத்ததற்கு காரணம்.''

இவ்வாறு சிவகுமார் கூறியுள்ளார்.

மனிஷாயாதவை நீக்கியது ஏன்?: டைரக்டர் சீனுராமசாமி விளக்கம்

விஜய் சேதுபதியை வைத்து ‘‘இடம் பொருள் ஏவல்’’ படத்தை சீனு ராமசாமி இயக்குகிறார். இதில் மனிஷா யாதவ் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு பிறகு நீக்கப்பட்டார்.


 இதனால் மனிஷா யாதவ் நடிகர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார்.


இதுகுறித்து சீனுராமசாமியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:–


இடம் பொருள் ஏவல் படம் மலை கிராமத்து கதை. மனிஷா யாதவுக்கு மேக்கப் போட்டபின் முகத்தில் கிராமத்து பெண் சாயல் வரவில்லை.


 கடும் முயற்சி எடுத்தும் தோற்றத்தை மாற்ற முடியவில்லை. பட்டணத்து பெண் போலவே தெரிந்தார். எனவேதான் அவரை நீக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.


விஷ்ணு ஜோடியாக இன்னொரு கேரக்டரில் நடிக்கும்படி கேட்டுள்ளோம். இன்னும் அவர் பதில் சொல்லவில்லை.


இவ்வாறு சீனுராமசாமி கூறினார். 

"நான் ஏன் வந்தேன்", விளக்குகிறார் ஷாருக்கான்

தமிழில் எனக்குத் தெரிந்த வார்த்தை 'தலைவா' மட்டும்தான். அந்த வார்த்தைக்குரியவருக்காகத்தான் இந்த விழாவுக்கு வந்தேன், என்றார் ஷாரூக்கான்.


 கோச்சடையான் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஷாரூக்கான் பேசுகையில், "25 வருடங்களுக்கு முன்பு ஒரு இந்தி படப்பிடிப்பில் ரஜினிகாந்தை முதன்முதலாக பார்த்தேன். அப்போது நான் ஒரு ரசிகனாக கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தேன்.


ரஜினியுடன் நடித்துக்கொண்டிருந்த நடிகர்-நடிகைகள் எல்லோரும் மதிய உணவு சாப்பிட போய் விட்டார்கள். இவர் மட்டும் சாப்பிடாமல் சிகரெட்டை ஸ்டைலாக தூக்கிப்போட்டு பிடித்து பிராக்டீஸ் செய்து கொண்டிருந்தார்.


பிற்பகல் 3 மணி. எல்லோரும் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். ஆனால் இவர் மட்டும் தன் பிராக்டிஸை விடாமலிருந்தார்.


வெற்றிபெற கடின உழைப்பு தேவை என்பதை இந்த மனிதரைப் பார்த்துதான் நான் கற்றுக் கொண்டேன். நான் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர். அவர் படங்களை அந்த அளவுக்கு ரசித்துப் பார்த்திருக்கிறேன். என்னுடைய ‘ரா-1 படத்துக்கு ரஜினிகாந்த் உதவினார்.


தமிழில் எனக்கு நன்றாகத் தெரிந்த வார்த்தை தலைவா. அந்த வார்த்தைக்குரியவருக்காகத்தான் இன்று நான் சென்னை வந்திருக்கிறேன். தமிழ் படங்கள் நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றன.


இந்த விழாவுக்கு வந்துள்ள திரையுலக ஜாம்பவான்களுடன் நானும் இருப்பதை பெருமையாக நினைக்கிறேன். நான் சென்னை வரும்போதெல்லாம் தமிழ் மக்கள் என் மீது அன்பு செலுத்துகிறார்கள். இங்கு வந்தால் எனது சொந்த வீட்டுக்கு வந்த மாதிரிதான் இருக்கிறது," என்றார்.