Saturday 8 February 2014

கேட்கத் தெரிகிறதா உங்களுக்கு?

கேளுங்கள் கொடுக்கப்படும்” மனிதகுலம் கண்ட மகத்தான வாசகங்களில் இதுவும் ஒன்று. எல்லா சமயங்களும், எல்லா கலாச்சாரங்களும், வெவ்வேறு மொழிகளில் இதையே சொல்கின்றன.

பொதுவாக ஒன்றை நாம் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தில் நம்மிடமிருந்து வெளிப்படும் இயல்புகளை, வயதாக வயதாக, .உரிய பக்குவத்துடன் வளர்த்து வரும்போது அது நமக்குப் பலவகைகளில் உறுதுணையாய் இருக்கிறது.

கேள்வி கேட்கிற குணம் அப்படியொரு குணம். உங்களுக்கு என்ன தேவையோ, அதை வெளிப்படையாய்க் கேட்கிற குணம் ஒவ்வொரு குழந்தையிடமும் உண்டு. சில வேளைகளில் பொறுமையில்லாத பெற்றோர்களோ, ஆசிரியர்களோ, ஓர் அதட்டல் போட்டு, கேள்வி கேட்கும் ஆர்வத்தை முடக்கி விடுகிறார்கள்.

தன்னுடைய தேவைகளைக் கேட்டுப் பெறுவது என்பதும், தெரியாத ஒன்றைக் கேட்டுத் தெரிந்து கொள்வது என்பதும், வெற்றிக்கான அடிப்படை தேவைகள்.

தேவை என்பது எல்லோருக்குமே இருக்கிறது. ஆனால், தேவை இருக்கிற எல்லோருமே கண்டடைவதில்லை. தேடல் யாருக்கு இருக்கிறதோ அவர்கள்தான் கண்டடைகிறார்கள். ‘அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்பது நம்முடைய நாட்டுப் புறங்களில் பிறந்த அனுபவ வாசகம்.

கிடைக்காது என்று முன்முடிவை தாமாக ஏற்படுத்திக் கொண்டு, எளிதில் கிடைக்க கூடியவற்றை கோட்டை விடுபவர்கள் எத்தனையோ பேர் உண்டு.

ஒரு குழந்தையின் இதழ்கள் ஓயாமல் உச்சரிக்கும் கேள்விகளின் வேர்களைத் தேடிப்பிடித்தால், சில சின்ன சின்ன சொற்கள்தான். யார்-என்ன-எங்கே-ஏன்-எப்படி-எப்போது. தீர யோசித்தால், உலகின் எல்லாக் கேள்விகளுமே இந்த ஆறு சொற்களுக்குள் அடங்கி விடக் கூடியதுதான்.

“இந்த மாமா யார்?” என்று கேட்கும் ஒரு குழந்தையில் தொடங்கி, ” நான் யார்” என்று கேட்கச் சொன்ன ரமண மகரிஷியின் வழிகாட்டுதல் வரை எல்லாமே கேள்விகளின் முக்கியத்துவத்தைத்தான் காட்டுகிறது நமக்கு.

நீங்கள் ஒரு தொழிலில் இருக்கிறீர்கள் என்றால், அந்தத் தொழிலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? உங்கள் தயாரிப்பைப் பற்றியோ, சேவையை பற்றியோ வாடிக்கையாளர்கள் என்ன கருதுகிறார்கள்? உங்கள் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகள் என்ன? உங்கள் போட்டியாளர்கள் எதைத் தருவதாக இழுக்கிறார்கள்? என்பது போன்ற கேள்விகள் மிகவும் முக்கியமானவை. இதற்கான பதில்களை நீங்கள் கண்டடைவதில்தான் உங்கள் அடுத்த கட்ட வளர்ச்சி இருக்கிறது.

அடுத்ததாக, நீங்கள் கேட்டுப் பெறக்கூடிய வாய்ப்புகள். வாய்விட்டுக் கேட்பவை மட்டுமே வாய்ப்புகளைப் பெறுவதற்கான வழி. எங்கெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்ற தேடல் எப்போதும் இருப்பவர்களே ஜெயிப்பவர்கள். “பூமி பொதுச்சொத்து! உன் பங்கு தேடி உடனே எடு!” என்கிறார் கவிஞர் வைரமுத்து.

உங்களுக்காக காத்திருக்கும் உங்களுக்கான வாய்ப்புகளை நீங்கள் தேடுகிறீர்களா? உங்களை நீங்களே கேளுங்கள். அமெரிக்க நாட்டில் விற்பனையாளர்களைப் பற்றி ஒரு விசித்திரமான ஆய்வு வெளி வந்திருக்கிறது. விற்பனையாளர்களில் 60% பேர் தாங்கள் விற்பனை செய்யும் தயாரிப்புகள் பற்றி விலாவாரியாக சொல்கிறார்களே தவிர, வணிக வாய்ப்பைத் தருமாறு கேட்கத் தயங்குகிறார்கள் அல்லது தவிர்க்கிறார்கள்.

நிறுவனங்கள், விற்பனையாளர்களுக்கு சொல்லித் தரவேண்டிய அடிப்படையான அரிச்சுவடியே, “அழுதபிள்ளை பால் குடிக்கும்” என்பதுதான்.

0 comments:

Post a Comment