Thursday 27 February 2014

எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை நடிகர் அமீர் கான் சொல்கிறார்!

எனக்கு எதிராக எந்த மிரட்டலும் வரவில்லை என்று இந்தி நடிகர் அமீர் கான் தெரிவித்தார்.

நடிகர் அமீர் கான்

இந்தி நடிகர் அமீர் கான் ‘சத்யமேவ ஜெயதே’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அதில் பெண்சிசு கொலை, ஆஸ்பத்திரியில் நடைபெறும் மோசடிகள் மற்றும் சமூகத்தில் நிலவும் கவுரவ கொலை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதம் நடத்தி வருகிறார். இந்த நிலையில், அவருக்கு சில விஷமிகள் கொலை மிரட்டல் விடுத்தனர். இதை உறுதிபடுத்தும் விதமாக அமீர் கான் சமீபத்தில் குண்டுகள் துளைக்காத விலை உயர்ந்த கார் ஒன்றை வாங்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியது.

பயம் இல்லை

இந்த நிலையில், நடிகர் அமீர் கான் நேற்று மும்பையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தனக்கு எதிராக வந்த கொலை மிரட்டல்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அமீர் கான் கூறியதாவது:–

எனக்கு எந்த மிரட்டலும் வரவில்லை. வந்தாலும் நான் பயப்பட மாட்டேன். வதந்திகளை நம்பாதீர்கள். என்னை பொறுத்தவரை நான் ஒரு தகவல் தொடர்பாளர். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது என் பொறுப்பு. மக்கள் என்னோடு சேர வேண்டும். இதை தான் நான் விரும்புகிறேன். தனிப்பட்ட முறையில், பெண்கள் கையில் அதிகாரம் இருப்பதை நான் விரும்புகிறேன்.

அரசியலில் ஆர்வம் இல்லை

மேலும் எனக்கு அரசியலில் ஆர்வம் கிடையாது. அதில் இருந்து விலகி இருக்கவே நான் விரும்புகிறேன். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகளில் தான் நான் கவனம் செலுத்துகிறேன். அரசியலில் அல்ல.

நான் உணர்ச்சிப்பூர்வமானவன். இதயம் நொறுங்குகிற அளவுக்கு கதைகளை கேட்கும்போது என்னை அறியாமலே அழுதுவிடுவேன். ‘சத்யமேவ ஜெயதே’ நிகழ்ச்சியில் நான் அழுத காட்சிகளை எல்லாம், ஊழியர்கள் நீக்கிவிடுவார்கள்.

இந்த உலகத்துக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் நபர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர்களது தைரியத்தையும், தீர்மானத்தையும் பார்த்து நான் தலை வணங்குகிறேன்.

இவ்வாறு நடிகர் அமீர் கான் தெரிவித்தார்.

0 comments:

Post a Comment