Saturday 1 March 2014

‘நோ’ சொன்ன சிம்பு! - சொல்ல மறுக்கும் திரிஷா!


‘நோ’ சொன்ன சிம்பு! - சொல்ல மறுக்கும் திரிஷா!


பிப்ரவரி மாதத்தின் காதலர் தினத்தை காதல் ஜோடிகள் வெகு சிறப்பாக கொண்டாடினர். ஆனால் திரையுலத்தைச் சேர்ந்த சில காதல் ஜோடிகளுக்குத் தான் இந்த வருட காதலர் தினம் அவ்வளவாக மகிழ்ச்சி தரக்கூடிய தினமாக அமையவில்லை.



சமீபத்தில் கைகோர்த்த காதல் ஜோடிகளான சிம்புவும் ஹன்ஸிகாவும் இந்த காதலர் தினத்தை எப்படி கொண்டாடப்போகிறார்கள் என்பதை ஒட்டுமொத்த திரையுலகமும் உற்று கவனிக்க எந்த கொண்டாட்டமும் இல்லாமல் சொதப்பியது.


பேட்டிகளில் சிம்புவைப் பற்றிய கேள்விகளை ஹன்ஸிகா தவிர்த்துவர, சிம்புவோ சமீபத்தில் எங்கள் காதல் முறிந்துவிட்டது என்று அறிக்கையே விட்டுவிட்டார். “காதல் என்ற சீரியஸான உறவுமுறைக்கு ஹன்ஸிகா ஏற்றவரல்ல. அவர் இன்னும் வளரனும்” என்று சிம்பு விட்ட அறிக்கையில் திரையுலகமே ஆடிவிட்டது.



சிம்பு ஹன்ஸிகாவின் காதல் முறிந்த கதை திரையுலகத்தில் பரபரப்பாக பேசப்பட, இந்த பரபரப்பை அப்படியே தன் பக்கம் திருப்பிக் கொண்டவர் காஜல் அகர்வால். காதலுக்கும் நேரமில்லை, கல்யாணத்துக்கும் நேரமில்லை என்று பேட்டிகளைக் கொடுத்தவண்ணம் இருந்தவர், திடீரென தனது தங்கை நிஷா அகர்வாலுக்கு திருமணம் முடித்துவைத்து பல கோவில்களுக்கும் சென்று வந்தார்.


தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் ஒரு ரவுண்டு வந்துவிட்டு அடுத்த ரவுண்டுக்காக காத்திருக்கும் காஜல், காதலில் சிக்காமல் இருக்கிறாரே என பலரும் சிலாகித்த சமயத்தில், காஜல் அவர் பாய்-ஃபிரண்டுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகிவிட்டன. மும்பையைச் சேர்ந்த டிசைனிங் நிறுவன தொழிலதிபருடன் காஜல் காதல் வயப்பட்டிருப்பதாகவும், தங்கைக்கு திருமணமாகிவிட்டதால் கூடிய விரைவில் அவருக்கும் திருமணம் நடந்துவிடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.




திரையுலகில் தனது 10-வது ஆண்டைக் கடந்து கொண்டிருக்கும் த்ரிஷா கேமரா முன்பு நின்றதுமே, அவர் தற்போது நடித்துக்கொண்டிருக்கும் ’ரம் (ரம்பா ஊர்வசி மேனகா) ’ திரைப்படத்தைப் பற்றி பேச ஆரம்பித்துவிடுகிறாராம். பலவித ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருப்பதாகவும், எத்தனையோ படங்களில் நடித்துவிட்டாலும் தற்போது தான் முழுக்க முழுக்க ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையில் நடித்துக்கொண்டிருப்பதாகவும் மகிழ்ச்சியில் பூரிக்கிறார் த்ரிஷா.


வழக்கம் போலவே ‘உங்களுக்கும் ராணாவுக்கும் இடையில் இருப்பது காதலா? நட்பா? என்ற கேள்விக்கு ‘சிலவற்றைப் பற்றி பேச சரியான நேரம் வரவேண்டும். அந்த சமயத்தில் கண்டிப்பாக பேசுவேன். உங்களை விட்டால் வேறு யாரிடம் பேசப்போகிறேன்’ என தொடர் புள்ளிகளை வைக்கிறார் த்ரிஷா. 

0 comments:

Post a Comment