Saturday 1 March 2014

'கோச்சடையானும்' - செளந்தர்யாவும்!

 'கோச்சடையான்' திரைப்படம் வெளியாகும் தேதி, இசை வெளியீட்டு விழா முடிந்த உடன் முடிவு செய்யப்படும் என்று இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்தார்.


ரஜினி, தீபிகா படுகோன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருக்கும் 'கோச்சடையான்' படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 9ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கிறது. அமிதாப் பச்சன், இயக்குநர் பாலசந்தர், இயக்குநர் ஷங்கர், இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் ஆகியோர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.


'கோச்சடையான்' படத்திற்காக கார்பன் மொபைல்ஸ் நிறுவனம், 'கோச்சடையான் மொபைல்ஸ்’ என்ற பெயரில் மொபைல் போன்களை வெளியிட திட்டமிட்டு இருக்கிறது. அதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது. 'கோச்சடையான் மொபைல்' போனை இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த் வெளியிடுகிறார்.


இப்பத்திரிகையாளர் சந்திப்பில் இயக்குநர் செளந்தர்யா ரஜினிகாந்த் பேசியது, "'கோச்சடையான்' படத்தின் இசை மார்ச் 9ம் தேதி கண்டிப்பாக வெளியாக இருக்கிறது. இசை வெளியீட்டு விழாவிற்கு பிறகே, படம் வெளியாகும் தேதி முடிவு செய்யப்படும்.


என்னோட அப்பா இப்படத்திற்கு மிகவும் உறுதுணையாக இருந்தார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகராக நடந்து கொண்டது என்னை வியக்கவைத்தது. அதுமட்டுமன்றி, தீபிகா படுகோனுடன் காதல் காட்சிகளில் நடிக்கும் போது மிகவும் சங்கடப்பட்டார்.


'கோச்சடையான்' படத்தின் பட்ஜெட் மிகவும் பெரியது. இப்படத்தில் நாகேஷை நவீன முறையில் கொண்டு வந்து இருக்கிறோம். கண்டிப்பாக மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெறும்" என்று கூறினார். 

0 comments:

Post a Comment