Friday 28 February 2014

ஆணுக்கு தந்தையாக போகிறோம் என்ற சந்தோஷத்திற்கு பின் உள்ள பயங்கள்!

ஒரு ஆணுக்கு தந்தையாக போகிறோம் என்றால் அதை விட சந்தோஷம் வேறு எதுவாக இருக்க போகிறது? அவனுடைய குழந்தையை கையை பிடித்து கொண்டு, இந்த உலகத்தை சுற்றி வருவது என்றால் அதில் உள்ள இன்பம் வேறு எதில் உள்ளது? பகல் என்றால் இரவு ஒன்று இருப்பதை போல, இந்த சந்தோஷத்திற்கு பின்னால் பல பயங்களும் ஒளிந்திருக்கிறது. ஆனால் அவைகளை பொதுவாக ஆண்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை.

தந்தையாக போகிற ஒவ்வொரு ஆணுக்கும் தனக்கு தகப்பன் என்று புதிதாக வர போகிற ஸ்தானம் மற்றும் அதிலுள்ள பொறுப்புகளை எண்ணும் போது, ஒரு பயம் இருக்கத் தான் செய்யும். இந்த புதிய மாற்றத்துடன் அவர்கள் ஒன்றி விட முதலில் கஷ்டப்படுவது இயல்பாக ஏற்படுவது தான். உண்மையை சொல்ல வேண்டுமானால், கருவை சுமந்து ஒரு குழந்தையை பெற்றெடுக்கும் தாய் தான் இந்த கதாநாயகனாக விளங்குகிறாள். இருப்பினும் தந்தையாக போகிறவர்கள் தகப்பன் என்ற ஸ்தானத்தில் பயணிக்கும் போது, வாழ்க்கை முழுவதும் அவர்களுக்கு பல பொறுப்புகள் காத்துக் கொண்டு இருக்கிறது.

பயத்தை எல்லாம் கடந்து வருவது தான் தந்தையாக போகிறவர்களின் கடமையாகும். இருப்பினும் தான் அப்பா ஆக போகிறோம் என்ற நினைப்பை ஏற்றுக் கொள்ளவே பலருக்கு பயம் வந்துவிடும். அவர்களின் மனதில் குழப்பும், துயரமும் உலா வந்தாலும் கூட, அவர்கள் அதனை வெளியில் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதில்லை.

புதிதாக தந்தையாக போகிறவர்களுக்கு, தங்கள் குழந்தையை சரியான முறையில் கையில் தூக்குவோமா என்ற பயம் அவர்களை சூழும். அதனுடன் சேர்த்து குழந்தைக்கு சரியாக டையப்பர் மாற்றுவது, அதனை பாதுகாப்பது, வீட்டை குழந்தைக்காக பாதுகாப்பாக மாற்றுவது போன்றவைகளும் பயத்திற்கான சில உதாரணங்கள். இவ்வகை பயன்கள் எல்லாம் இயல்பாக வருவது தான். ஆனால் அவைகளையெல்லாம் மிகைப்படுத்த தேவையில்லை.

அலுவலக வேலை மற்றும் சொந்த வாழ்க்கையை சமமாக சமாளிப்பது என்பது ஒரு தந்தையும் சந்திக்கும் முக்கிய சவாலாகும். உங்கள் குடும்பத்திற்கென நீங்கள் ஒதுக்கும் பொன்னான நேரத்திற்கு ஈடு இணை வேறு கிடையாது. தந்தையாக போகும் ஆண்களுக்கு, தங்கள் வீட்டில் குடும்பத்துடன் செலவிட நேரம் கிடைக்குமா என்பதில் பயம் ஏற்படும். மேலும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள கவன சிதறலால் தங்களால் வேலையில் ஒழுங்காக கவனம் செலுத்த முடியுமா என்ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும். மேலும் வேலைப்பளு காரணமாக தங்கள் குழந்தையின் வாழ்க்கையில் நடக்கும் விசேஷமான தருணங்களில் கலந்து கொள்ள முடியாது போன்ற எண்ணங்களால் இவ்வகை கவன சிதறல் உண்டாகும்.

குழந்தை வந்தாலே தந்தையின் வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்படும். அதனை உங்கள் மனைவி கர்ப்பமாக இருக்கும் காலம் முதலே நீங்கள் கவனிக்க தொடங்கலாம். குழந்தை பிறந்த நேரத்தில், அதற்கென அதிக நேரம் மற்றும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதனால் உங்கள் மனைவி உங்களிடம் அன்யோநியமாக இல்லாமல் போகலாம். அதற்கு காரணம் அவர்களுக்கு ஏற்படும் களைப்பும் உளைச்சலும். ஆனால் இது நிரந்தரம் அல்ல. குழந்தை வளர வளர இது மெதுவாக மாறும். அதற்கு உங்களிடம் பொறுமை இருக்க வேண்டும்.

பெற்றோராக மாறிய பின் பொறுப்புகள் கூடுவதால், அதற்கென செலவிடும் நேரமும் அதிகமாகும். அதனால் தங்களின் பொது வாழ்க்கை பாதிக்கப்படும் என்ற பயமும் ஆண்களிடம் இருக்கும். தன் நண்பர்களுடன் வெளியில் செல்வது அல்லது பார்ட்டிக்கு செல்வது போன்றவைகள் எல்லாம் தடைபட்டு விடுமோ என்ற பயமும் இருக்கும். இதனால் தங்களின் அனைத்து நண்பர்களையும், அந்த வாழ்க்கையையும் தொலைத்து விடுவோமோ என்ற பயமும் சேர்ந்து கொள்ளும்.

தங்கள் குடும்பத்தில் பார்த்த நிகழ்வுகள் சில ஆண்களுக்கு பயத்தை உருவாக்கும். அதாவது காதல் மழையில் நனைந்து, தன்னுடனேயே இருக்கும் தன் ஆசை மனைவி அடியோடு மாறிவிட்டால்? ஆம், தந்தையாக போகிறவர்களுக்கு வரும் மற்றொரு பயம் - தன் மனைவி தன்னை விட தன் குழந்தையின் மீது தான் அன்பை செலுத்துவாளா? என்ற எண்ணத்தால், அவர்கள் அனுபவித்து வந்த அன்யோநியமான உறவு பாதிக்கப்படும். இப்படி அன்பு இடம் மாறும் போது, இது நியாயமான பயமாகத் தான் விளங்கும்.

தன் மனைவியின் பிரசவத்தின் போது தன்னால் அவளுக்கு துணையாக இருக்க முடியாது என்ற பயம் பல ஆண்களிடம் இருக்கும். பிரசவ வலியில் அவர்கள் துடிப்பது, கை கால்களை முறுக்குவது, ஆங்காங்கே காணப்படும் இரத்தங்களும் நீர்களும் ஆண்களுக்கும் குமட்டலை ஏற்படுத்தி தலை சுற்றச் செய்யும். அதனால் தான் பல ஆண்கள் பிரசவ நேரத்தில் கண்டிப்பாக மனைவிகளுக்கு துணையாக இருப்பதில்லை.

புது வாழ்க்கை தொடங்கும் போது, முடியும் ஒன்றை எண்ணி நாம் ஒன்றுமே செய்ய முடியாது. தந்தையாக போகிறவர்களுக்கு புதிதாக இன்னொரு உயிர் வரப்போவதால், தங்கள் இளமை பறி போய்விட்டது என்ற பயம் உண்டாகும். தந்தை என்றால் தன் குழந்தை மற்றும் குடும்ப தேவைக்காக பாடுபட்டு தன்னுடைய சுகங்கள் மற்றும் தேவைகளை எல்லாம் மூட்டை கட்டி விட வேண்டும் என்ற பயமும் அவர்களை தொற்றிக் கொள்ளும்.

பிரசவத்தின் போது தங்கள் மனைவி அல்லது குழந்தையை இழந்து விடுவோமா என்ற பயம் பொதுவாக ஆண்களுக்கு வருவது தான். ஒரு வேலை மனைவி இறந்துவிட்டால், குழந்தையை தனியாக வளர்க்க வேண்டும் என்ற பயம் சூழும். குழந்தையை பெற்றெடுக்க தாய் வலியால் துடிப்பதை பார்க்கும் போது, குழந்தை பிறப்பு என்பது நம்மை உறைய வைக்கும் ஒரு அனுபவமாக விளங்கும். ஆனால் இவ்வகை பயங்கள் எல்லாம் பகுத்தறிவுக்கு ஒவ்வாத பயங்களாகும். அவைகளை முதலில் அகற்றுங்கள்.
தன் குழந்தைக்கு தான் ஒரு நல்ல தந்தையாக இருக்க முடியுமா என்பது ஒவ்வொரு ஆணின் ஆழ்மனதில் நீடிக்கும் பயமாகும். தன் குழந்தையை பண ரீதியாக எந்த பிரச்சனையுமின்றி வளர்க்க முடியுமா என்ற பயமும் இருக்கும்.

தன் குடும்பத்தையும், குழந்தையின் கல்வியையும் பண ரீதியாக சமாளிக்க வேண்டுமே என்ற பயமும் பல ஆண்களிடம் இருக்கும். குழந்தை பெற்ற பின், தன் மனைவி வேலையை விட்டு நின்று விட்டதால், தன் ஒருவனின் சம்பளத்தை வைத்து குடும்ப தேவைகளை சமாளிக்க முடியுமா என்ற பயமும் உண்டாகும். இது நியாயமான பயமே. பல பேர் குடும்பத்தில் குழந்தை பிறந்தவுடன் இரண்டு பேருக்கு பயன்படுத்தப்பட்ட இருவரின் சம்பளம், இப்போது மூன்று பேருக்கு ஒரு ஆள் சம்பளமாக மாறி விடுவது வாடிக்கையாக நடந்து கொண்டு தான் இருக்கிறது.

0 comments:

Post a Comment