Friday 28 February 2014

கோச்சடையானில் நாகேஷூம் நடித்துள்ளார் - செளந்தர்யா பேட்டி!

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, தனது கணவர் தனுஷை ஹீரோவாக்கி இயக்குநராக அவதரித்தார். முதல்படமே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. அதனையடுத்து ரஜினியின் இரண்டாவது மகள் செளந்தர்யா, ஒருபடி மேலே போய், தன் அப்பாவையே தன் முதல்படத்தில் ஹீரோவாக்கி களம் இறக்குகிறார். அந்தப்படம் தான் கோச்சடையான். 3டி அனிமேஷன் படமாக, இந்திய சினிமாக்களில் முதன்முறையாக மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தில் இந்த படத்தை இயக்கி இருக்கிறார் செளந்தர்யா. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக உருவாகி வரும் இப்படம் தற்போது ரிலீஸ்க்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் கோச்சடையான் படத்தை பிரபலப்படுத்தும் வகையில் கார்பன் மொபைல் போனில், கோச்சடையான் மொபைல் என்று வெளியிட்டுள்ளனர். இதற்கான விழா சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் செளந்தர்யா,

கோச்சடையான் டெக்னாலஜி படம்

கோச்சடையான் சாதாரண படம் கிடையாது. 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள டெக்னாலஜி படம். பொதுவாக மக்கள், சினிமாக்காரர்கள் ஒருபடத்தை ஐந்தாறு மாதங்களில் எடுத்து அடுத்து இரண்டு மாதங்களில் ரிலீஸ் பண்ணி விடுகிறார்கள் என்றே எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். அது அக்ஷ்ன் போன்ற கமர்ஷியல் படங்களுக்கு செட்டாகும். இதுபோன்ற அனிமேஷன் படங்களுக்கு ஒத்துவராது. கோச்சடையான் படம் இவ்வளவு காலம் தாமதமாகி செல்ல, அதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் தொழில்நுட்பம் தான் காரணம். அவதார் போன்ற படங்களை எடுத்து முடிக்க கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆகியிருக்கிறது. கோச்சடையான் ஆக்ஷ்ன் படம் கிடையாது, டெக்னாலாஜி நிறைந்த படம். படத்தின் கதை கூட டெக்னாலஜி நிறைந்த கதை தான். இதில் பணியாற்றி இருப்பவர்கள் எல்லாம் பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்டுகள்.

அப்பாவை இயக்கியது சந்தோஷம்

அப்பாவை வைத்து படம் இயக்கியது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஒரு அப்பாவாக அவர் இருக்கும் போது மிகவும் பொறுப்புணர்ச்சியுடன், பாதுகாப்புடன் இருப்பார். அதேசமயம் நடிகராக தொழில்பக்தியுடன் இருப்பார். திறமைசாலிகளை எப்பவும் அப்பா ஊக்குவிப்பார், அதேப்போல் ஒருமகளாக, இயக்குநராக எனக்கு நிறைய ஆதரவு கொடுத்தார்.ஒரு மகளாக நான் இந்தப்படத்தை இயக்கும்போது தீபிகாவுடன் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க அப்பா ரொம்ப சங்கடப்பட்டார். இருந்தாலும் சிறப்பாக நடித்துள்ளார். அப்பா மட்டுமல்ல இப்படத்தில் நடித்துள்ள சரத்குமார், ஆதி, நாசர் உள்ளிட்ட எல்லோரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

கோச்சடையானில் நாகேஷூம் இருக்கிறார்

கோச்சடையான் படத்தை பற்றி இதுவரை வெளிவராத ஒரு தகவலை சொல்லப்போகிறேன். இந்தப்படத்தில் மறைந்த நடிகர் நாகேஷூம் நடித்துள்ளார். உண்மையில் இந்தப்படத்தில் அவர் நடிக்கவில்லை. மோஷன் கேப்ட்சரிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவரது முகம் மற்றும் உடலை வைத்து அவரும் நடித்தது போன்று எடுத்துள்ளோம். திரையில் ரசிகர்கள் பார்க்கும்போது நாகேஷ், நிஜத்தில் நடித்தது போன்ற உணர்வை ஏற்படுத்தும். கோச்சடையான் படத்தின் ஆடியோ சி.டி.யின் கவர்பேஜிலேயே நாகேஷின் உருவத்தை வெளியிட்டுள்ளோம். இதன்மூலம் அவருக்கு இப்படத்தை சமர்ப்பிக்க எண்ணியுள்ளோம்.

கோச்சடையான் படத்தின் ஆடியோ ரிலீஸ் மார்ச் 9ம் தேதி நடைபெறுகிறது. ஏப்ரலில் படம் ரிலீஸாகும். கோச்சடையான் படத்திற்கு ரசிகர்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்பதை பார்த்து வருங்காலத்தில் இதுபோன்ற படங்களை நான் நிறைய எடுப்பேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்

0 comments:

Post a Comment