Saturday 15 February 2014

இது கதிர்வேலன் காதல் - காமெடி கலாட்டா... திரைவிமர்சனம்!

வழக்கமாக காதலுக்கு ஏற்படும் பிரச்சனையை சமாளித்து அதை சுபமாக்கி காதலியை வீட்டிலுள்ளவர்கள் சம்மதத்தோடு கைபிடிக்க நினைக்கும் காதல் கதை தான், இது கதிர் வேலன் காதல்.

ஆனால் இந்த கதிர்வேலன் அதை எப்படி சுவாரஸ்யமாக செய்கிறார் என்பதே இப்படத்தின் சிறப்பம்சமாகும். படம் அதிர்ச்சியான காட்சியோடு தொடங்குகிறது. உதயநிதியின் அக்கா சாயாசிங் வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்தவர். அதனால் காதல் என்றாலே உதயநிதியின் அப்பா நரேனுக்கு வெறுப்பு.

சாயாசிங் தன் கணவரோடு கோபித்துக் கொண்டு பிறந்த வீட்டுக்கு வர அக்கா கணவரிடம் பேசி சமாதனம் செய்து வைக்க மதுரையிலிருந்து கோயம்புத்தூர் வருகிறார் உதயநிதி. அக்கா வீட்டின் எதிர் வீட்டிலிருக்கும் நயன்தாராவை பார்த்ததும் காதலில் விழுகிறார். ஆஞ்சநேய பக்தரான உதயநிதி அந்த நேரத்தில் அங்கு சந்திக்கும் தன் பால்ய நண்பன் சந்தானத்தின் உதவியோடு தன் காதலில் வெற்றி பெற போராடுகிறார்.

நயன்தாராவின் நண்பரான சுந்தர் ஒருபக்கம் அவரை அடைய நினைக்கிறார். உதயநிதியின் அக்கா கணவருக்கும் நயன்தாராவின் அப்பா ஜெய பிரகாஷ்க்கும் ஜென்ம பகை. நரேன் தன் மகன் உதயநிதிக்கு பெண் பார்க்கிறார். உதயநிதி தன் காதலுக்கு இருக்கும் இவ்வளவு சிக்கல்களையும் முறியடித்து  நயன்தாராவை கைபிடித்தாரா என்பதே மீதி கதை.

உதயநிதி இரண்டாவது படத்தில் நடனத்தில் முன்னேறி இருக்கிறார். இயல்பாக நடிக்க முயற்சிப்பது அழகாக இருக்கிறது. ரொம்ப நாளைக்கு கண்ணாடி போட்டுக் கொண்டு நடிப்பது கைகொடுக்காது என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும். நயன்தாராவின் அழகு நாளுக்கு நாள்  கூடிக் கொண்டே போகிறது. அவர் வரும் காட்சிகளை தனித்திறனோடு திறமையான நடிக்கும் அளவுக்கு மிகவும் தேறிவிட்டார்.

சந்தானம் வந்த பிறகே படம் களை கட்டுகிறது. தன்னை நம்பியவர்களை கைவிடாமல் அவர் அற்புதமாக நடித்துள்ளார். அதுவும் உதயநிதி காதலுக்காக நரேனிடம் பேசப்போகும் காட்சியில் அசத்தல் நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆஞ்சநேயர் வேடத்தில் வரும் லொள்ளுசபா சாமிநாதனும், மிமிக்ரி ஆர்டிஸ்ட்டாக வரும் மயில்சாமியும் கொஞ்ச நேரமே வந்தாலும் கலக்கியுள்ளனர்.

சாயாசிங், உதய நிதியின் அம்மாவாக வரும் சரண்யா, நண்பராக வரும் முருகதாஸ், நயன்தாரா தோழியாக வந்து சந்தானத்தின் காதலியாக மாறும் கேரளப்பெண், வில்லத்தனம் காட்டும் சுந்தர் ஆகியோர் கிடைத்த பாத்திரத்தில் கச்சிதமான நடிப்பை காட்டியுள்ளனர்.

சாயாசிங்கின் கணவராக வரும் நபர் மிக அழகாக இருப்பதோடு  நடிக்கவும் தெரிந்தவராக இருக்கிறார். நரேன் அருமையான நடிகர் என்பதை ஒவ்வொரு முறையும் நிருபித்துக் கொண்டு இருக்கிறார். ஜெய பிரகாஷ்ஷும் அவருடைய மனைவியாக வருபவரும் நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பாலசுப்பிரமனியெம் ஒளிப்பதிவில் காட்சிகள் உயர்தரமாக இருக்கிறது. சாதாரண குடும்ப படம் என்று விட்டு விடாமல் கவனம் எடுத்து ரசனையாக பதிவு செய்திருக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பின்ணணி இசை  சில இடங்களில் ஏற்க்கனவே கேட்ட உணர்வு. பாடல்கள் கேட்க நன்றாக இருக்கிறது.

ரொம்ப நாளைக்கு பிறகு குடும்பத்தோடு பார்க்கிற அழகான படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் SR. பிரபாகரன். சண்டைகாட்சிக்கு வாய்ப்பிருந்தும் அதை செய்யாமல் முழுமையான குடும்ப படத்தை தந்திருக்கிறார். கடைசி காட்சியில் முதல் காட்சிக்கான புதிரை அவிழ்க்கும் இடத்தில் நம்மால் சிரிப்பை அடக்க முடியாது. அதே போல் நரேனுடன் உதயநிதி விவாதம் செய்யும் இறுதிக் காட்சி வசனங்களும் நரேனின் நடிப்பும் தாக்கத்தை உண்டு பண்ணுகிறது.

இயக்குனர் முதல் பத்து நிமிடங்களுக்கு நிறைய திருப்பங்களை தந்து விட்டு அடுத்து திரைக்கதை மெதுவாக நகர்த்துவது கதைக்குள் எளிதில் உள்ளே போக முடியவில்லை. இருந்தாலும் அந்த நேரத்தில் சந்தானம் வந்து காப்பாற்றி விடுகிறார் என்று சொல்ல வேண்டும். எடிட்டிங்கில் இன்னும் ஷார்ப் செய்திருக்கலாம். இரண்டரை மணி நேர படம் என்பதால் படத்தின் நீளம் மிக அதிகம் என்றே சொல்ல தோன்றுகிறது.

எல்லோரும் ஏற்று கொள்ளும்படியான காதலை காட்டிய விதத்தில் கதிர்வேலன் காதல் வெற்றி பெற வேண்டிய காதலே.

மொத்தத்தில் இது கதிர்வேலன் காதல் காமெடி கலாட்டா... 

0 comments:

Post a Comment