Friday 7 February 2014

‘புலிவால்’ மொட்ட வால் - திரைவிமர்சனம்!

விமல், அனன்யா, சூரி ஆகியோர் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் சேல்ஸ் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த சூப்பர் மார்க்கெட்டுக்கு மேனேஜராக இருப்பவர் தம்பி ராமையா. சேல்ஸ் மேனனான விமலும், சேல்ஸ் பெண்ணான அனன்யாவும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராக காதலித்து வருகின்றனர்.

மறுமுனையில் பெரிய தொழிலதிபரான பிரசன்னா, அவருடைய கம்பெனியில் வேலை செய்யும் ஓவியாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறார். பெண்களை ஏமாற்றி திரியும் பிரச்சன்னாவின் குணாதிசயம் தெரியாமலேயே அவருடன் நெருங்கி பழகி வருகிறார் ஓவியா.

இந்நிலையில், பிரசன்னாவுக்கு திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் ஏற்பாடு செய்கின்றனர். அதன்படி இனியாவை பேசி முடிக்கின்றனர். இந்த வேளையில் ஓவியாவை தன்னுடைய கெஸ்ட் ஹவுசுக்கு வரவழைத்து அவளுடன் நெருக்கமாக இருக்கிறார் பிரசன்னா. இதை தன்னுடைய செல்போனில் படம் பிடித்தும் வைத்துக் கொள்கிறார்.

பின்னர், ஓவியாவை வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு இனியாவைப் பார்க்கச் செல்கிறார் பிரசன்னா. அப்போது டிரைவர் மூலமாக பிரசன்னாவுக்கு இனியாவுடன் நிச்சயதார்த்தம் ஆன விஷயம் ஓவியாவுக்கு தெரியவர, பிரசன்னாவை போனில் அழைக்கிறாள். தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறும் அவள், தன்னை ஏற்றுக்கொள்ளாவிட்டால் இருவருக்குமுள்ள உறவை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டுகிறாள்.

பயந்துபோன பிரசன்னா ஓவியாவை சந்திக்க விரைந்து வருகிறான். இருவரும் காபி ஷாப்பில் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்கின்றனர். இறுதியில் பிரசன்னா, ஓவியாவிடம் இருவரும் நெருக்கமாக இருந்த வீடியோவை காண்பிக்க அதன்பிறகு அமைதியாகிறார் ஓவியா. பிரசன்னாவிடம் கோபித்துக் கொண்டு வெளியே சென்றுவிடுகிறார்.

பிரசன்னாவும் கோபத்தில் எழுந்துபோக, அவருடைய செல்போன் அங்கேயே விழுந்துவிடுகிறது. இந்நிலையில், அங்கு வரும் விமல் அந்த செல்போனை எடுத்துக் கொண்டு செல்கிறார். ஓவியாவும், பிரசன்னாவும் நெருக்கமாக இருந்த காட்சிகள் அந்த செல்போனில் இருப்பதால் அதை எப்படியாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று தீவிரமாக தேடி வருகிறார் பிரசன்னா. இறுதியில், விமல்தான் அதை எடுத்தவர் என்று தெரியவர, விமலும் அதைக் கொடுக்க வருவதாகக் கூறிவிட்டு, கமலா தியேட்டருக்கு வருகிறார். ஆனால், பிரசன்னாவிடம் அதைக் கொடுக்காமலேயே திரும்பி விடுகிறார்.

ஒரு கட்டத்தில் செல்போனில் சார்ஜ் இறங்கிவிட, அதை சார்ஜ் செய்வதற்காக தன்னுடைய நண்பன் கடைக்கு செல்கிறார் விமல். அங்கு தனது நண்பனிடம் செல்போனை கொடுக்கிறார். அவர் செல்போனில் இருக்கும் வீடியோவை பார்த்து, அதை யூடியூப்பில் அப்லோடு செய்துவிடுகிறார். இதனால் அவமானம் தாங்க முடியாத ஓவியா தற்கொலைக்கு முயல்கிறார். பிரசன்னாவின் திருமணமும் தடைபட்டு விடுகிறது.

இறுதியில் ஓவியாவும், பிரசன்னாவும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

விமல் வழக்கம்போல் எல்லா படங்களிலும் வருவதுபோல் அப்பாவியான முகத்துடன் படம் முழுவதும் வலம் வருகிறார். இவரது முகபாவணையை பார்த்து பார்த்து ரசிகர்களுக்கு சலிப்படைந்து விட்டது. இனிமேலாவது இவரது நடிப்பை மாற்றிக் கொண்டால் ரசிக்கலாம். அந்த அளவுக்கு இந்த படத்தில் சொதப்பியிருக்கிறார்.

பிரசன்னா தன்னுடைய கதாபாத்திரத்திற்குண்டான நடிப்பை செவ்வனே செய்திருக்கிறார். ஓவியா, இனியா, அனன்யா என படத்தில் மூன்று கதாநாயகிகள் இருந்தாலும், இவர்களுக்கு நடிப்பதற்கு வாய்ப்பு குறைவே. அனைவருடைய கதாபாத்திரத்தையும் வீணடித்திருக்கிறார்கள். ஓவியாவை கவர்ச்சிக்கு மட்டுமே பயன்படுத்தியிருக்கிறார்கள்.

சூரி, தம்பி ராமையா என காமெடி ஜாம்பவான்கள் இருந்தும் படத்தில் காமெடிக்கு பஞ்சமே. மொபைலில் வரும் பஞ்ச் டயலாக்குகளையே காமெடி என்ற பெயரில் பேசி சூரி கடுப்பேத்தியிருக்கிறார். வழக்கம்போல், இவர் தனி டிராக்கில் காமெடி செய்திருந்தாலாவது ரசித்திருக்கலாம்.

செல்போன் என்பது இப்போது எல்லோருடைய வாழ்க்கையிலும் அன்றாட தேவையான ஒன்றாக மாறிவிட்டது. அதை சிலர் தவறான வழிகளில் பயன்படுத்தி வருகிறார்கள். அதனால் ஏற்படும் விளைவை இயக்குனர் இப்படத்தில் சொல்லியிருக்கிறார். இந்த கதையை சொல்ல 15 நிமிட காட்சிகளே போதுமானது. ஆனால், 2 மணி நேரம் படத்தை ஓட்டுவதற்காக காட்சிகளை இழுஇழுவென்று வைத்து போரடிக்க வைத்திருக்கிறார். இயக்குனர் சொல்ல வந்த விஷயம் நல்லதாக இருந்தாலும் அதை ரசிக்கும்படியாக வைப்பதில் கோட்டை விட்டிருக்கிறார்.

என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். போஜன் கே.தினேஷ் ஒளிப்பதிவு படத்திற்கு சிறிது வலு சேர்த்திருக்கிறது.

0 comments:

Post a Comment