Tuesday 18 March 2014

அமர்க்களமாக நடந்த மான் கராத்தே ஆடியோ விழா (படங்கள்)

சும்மா சொல்லவில்லை. படுஅமர்க்களமாகதான் நடந்தது மான் கராத்தே பாடல்கள் வெளியீட்டுவிழா. அரங்கு கொள்ளாத அழைப்பாளர்களுடன் நூற்றுக்கணக்கில் ரசிகர்களும் முட்டி மோதியதில் சில விரும்பத்தகாத சம்பவங்கள். தடித்தடியாக இருந்த பவுன்சர்கள் அழைக்கப்பட்டவர்களையும் அலைக்கழித்தவிதம் பலரை முகம் சுழிக்க வைத்தது.


சிறப்பு அழைப்பாளர் ஷங்கர். நான் அனிருத்தின் ரசிகனாக வந்திருக்கிறேன் என்றவர் அவரின் ஒவ்வொரு படத்தை குறிப்பிட்டு பேசியது, மேடை நாகரிகம் கருதி சொல்லப்பட்ட வெறும் வார்த்தையல்ல என்பதை உணர்த்தியது. நான் காரில் ஏறினால் வணக்கம் சென்னை பாடல்கள்தான் ஒலிக்கும் என்றது அனிருத்தை கள்வெறி கொள்ள வைத்திருக்கும்.



சரியான பாதையில் போய்கிட்டிருக்கீங்க என்று சிவ கார்த்திகேயன் பற்றி சொன்னவர், இப்படியோ போனால் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இணைந்து கொள்ளலாம் என்றார்.


இது மட்டும் சிவ கார்த்திகேயனுக்குப் பிடித்திருக்க வாய்ப்பில்லை. விழா நெடுக கும்மியடித்த ரசிகர்களும், சிவ கார்த்திகேயனின் பேச்சும், அவர் ஏற்கனவே முன்னணி லிஸ்டில் இருப்பதை போலதான் இருந்தது.


என்னுடைய படத்தைப் பார்க்க வரும் ரசிகர்கள் ரசித்துப் பார்க்க வேண்டும் என்பதே என்னுடைய ஆசை. நான் இந்த நிலைக்கு வர ரசிகர்கள்தான் காரணம். அவர்கள் என்னை விழாமல் தாங்கிப் பிடிப்பார்கள் என்றார் சிவ கார்த்திகேயன்.


அண்ணாத்தே விரைவில் கட்சி ஆரம்பித்து சிஎம் போஸ்டுக்கு கர்ச்சீஃப் போடுவார் போலத் தோன்றியது. விழா நெடுக வருங்கால சூப்பர்ஸ்டார் என்று மேடையில் இருந்தவர்களும், ரசிகர்களும் கூச்சலிட்டதே அதற்கு சான்று.

0 comments:

Post a Comment