Sunday 2 March 2014

தனுஷ் கை விட்டாலும் விஜய் சேதுபதி கை விடமாட்டார்..!


தனுஷ் படம் கைவிட்டுப்போனதால் விஜய் சேதுபதியுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றுக்கொண்டார் மனிஷா. கூடல் நகர், தென்மேற்கு பருவக்காற்று, நீர்பறவை படங்களை இயக்கிய சீனு ராமசாமி அடுத்து மலைஜாதி இன மக்களின் பிரச்னைகளை மையமாக வைத்து புதிய படம் இயக்குகிறார்.

இதில் விஜய் சேதுபதி ஹீரோ. மலைஜாதி இன பெண்ணாக நடிக்க பொருத்தமான நடிகையை தேடி வந்தார். புதுமுகங்களுக்கு அவர் நடிப்பு பயிற்சி வைத்து தேர்வு செய்ய முடிவு செய்தார். பல்வேறு பெண்கள் பங்கேற்றனர். ஆனால் யாரும் மனதுக்கு திருப்தியாக இல்லை.

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் படங்களில் நடித்த மனிஷா யாதவும் தேர்வுக்கு வந்திருந்தார். அவருக்கும் சில சீன்களை சொல்லி நடிக்க கேட்டார். அவரது நடிப்பு பிடிக்கவே தேர்வு செய்தார். இதன் ஷூட்டிங் கொடைக்கானலில் நடக்க உள்ளது. இதற்காக கொடைக்கானல் உட்பகுதியில் உள்ள மலைஜாதி கிராமம் ஒன்றை இயக்குனர் தேர்வு செய்துள்ளார்.

 அங்குள்ளவர்களின் நடவடிக்கைகளை கவனித்து அதை பின்பற்றி நடிக்கும்படி மனிஷாவுக்கு அட்வைஸ் கூறி உள்ளார் இயக்குனர். விரைவில் அந்த மலைஜாதி இன மக்கள் வாழும் பகுதியில் தங்கி அவர்களின் பழக்கவழக்கங்கள்பற்றி மனிஷா அறிய உள்ளாராம்.

வெற்றிமாறன் இயக்கும் படத்தில் தனுஷ் ஜோடியாக நடிக்க மனிஷாவிடம் பேசி இருந்தனர். ஆனால் திடீரென மனிஷா வேண்டாம் என தனுஷ் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது. அந்த வேடம் அமலா பாலுக்கு கைமாறும் என தெரிகிறது. தனுஷ் படத்துக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த கால்ஷீட் தேதிகளை விஜய் சேதுபதி படத்துக்கு மனிஷா கொடுத்துள்ளார். 

0 comments:

Post a Comment