Sunday 2 March 2014

அலர்ஜியாகுதே அழகு!

அழகுசாதனங்களும் கிட்டத்தட்ட உயிர் காக்கும் மருந்துகள் மாதிரிதான். மருந்துகளை வாங்கும்போது, அவற்றின் தயாரிப்புத் தேதி, காலாவதி தேதி,  பேக்கிங் என எல்லாம் சரி பார்த்து வாங்குகிறோமில்லையா..? ஒருவருக்கு சரியாக வருகிற மருந்துகள், இன்னொருவருக்கு பிரச்னையைக்  கொடுப்பதில்லையா? அது போலத்தான் அழகு சாதனங்களும்... அலர்ஜி வராமலிருக்க, அழகு சாதனங்களை வாங்கும் போதும், உபயோகிக்கும் போதும்  சில முக்கிய விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். அவற்றைப் பற்றி விளக்குகிறார் கிரீன் ட்ரென்ட்ஸ் மல்லிகா.

அழகுசாதனங்களில் சேர்க்கப்படுகிற ரசாயனங்கள், நிறமிகள் போன்றவற்றின் காரணமாகவே பெரும்பாலும் ஒவ்வாமை உண்டாகிறது. இது சாதாரண  பவுடரில் தொடங்கி, ஃபவுண்டேஷன், லிப்ஸ்டிக், ரூஜ், ஐ லைனர், ஐ ஷேடோ, ஹேர் கலர்ஸ் என எல்லாவற்றிலும் வரலாம். ஒருவருக்கு  ஒத்துக்கொள்ளாத அழகு சாதனம், இன்னொருவருக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகலாம். எனவே, ஒவ்வாமை என்பது நபருக்கு நபர் வேறுபடும்.

ஹேர் டை - ஹேர் கலர் அலர்ஜி

அழகுசாதனங்களில் அதிகமான அலர்ஜியை உண்டாக்கக்கூடியவை ஹேர் டை மற்றும் ஹேர் கலர்கள். காரணம், அவற்றில் உள்ள ஸ்ட்ராங்கான  கெமிக்கல் கலவை. பிபிடி, பிஏடிஏ, அமோனியா மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைடு ஆகியவை எல்லோருக்கும் ஏற்றுக் கொள்வதில்லை. இவற்றில்  பிபிடி என்பது டார்க் கலர் டைகளிலும், பிஏடிஏ என்பது லைட் கலர்களிலும் பிரதானமாக இருக்கும்.

அதனால், டை உபயோகிப்பதற்கு முன், ‘பேட்ச் டெஸ்ட்’ என்பது மிக முக்கியம். டையில் சிறிதளவை எடுத்து, காதின் பின்புறம் சிறிது தடவி, 24 மணி  நேரம் காத்திருக்க வேண்டும். கண்கள் சிவப்பது, அரிப்பு, எரிச்சல், கண்களில் தண்ணீர் வடிதல்,     வீங்குதல், மயக்கம் மாதிரியான ஏதேனும் பிரச்னை  தெரிந்தால், அந்த டை அலர்ஜியை உண்டாக்கும் என அர்த்தம். அதை உபயோகிக்கக் கூடாது. இப்போது அமோனியா இல்லாத ஹேர் கலர்கள்  கிடைக்கின்றன. ஆனால், இவை தற்காலிக மானவை. நிரந்தர ஹேர் கலர்கள், முடியின் உள்ளே ஊடுருவி, முடிக்கு நிறத்தைக் கொடுக்கும் என்றால்,  இந்தத் தற்காலிக கலர்கள், முடியின் மேல் பகுதியில் மட்டும் படிந்து நிறத்தைக் கொடுக்கும்.

அமோனியா இல்லாததாலேயே அது எல்லோருக்கும் ஒப்புக் கொள்ளும் என்று சொல்வதற்கில்லை. அதுவுமே சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கலாம்.  டை அலர்ஜி உள்ளவர்கள், ‘ஹென்னா’ போன்ற இயற்கை கலர்களுக்கு மாறுவதே பாதுகாப்பானது. டை ஒப்புக் கொண்டாலுமே, அதை புருவங்களில்  போடுவதைத் தவிர்ப்பது நல்லது. கண்களுக்குப் பக்கத்தில் உள்ள பகுதி என்பதால், அதன் விளைவாக பார்வை பாதிப்பு வரக்கூடும். ஜாக்கிரதை!

பிளீச் அலர்ஜி

டைக்கு அடுத்தபடியாக அலர்ஜியை உண்டாக்கும் அழகுப்பொருள் பிளீச். ஃபேஷியலுக்கு முன் செய்யப்படுகிற ஒரு சிகிச்சையே பிளீச். இதைச்  செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள மெல்லிய ரோமங்கள் சரும நிறத்துக்கே மாறும். அதனால் சருமம் நிறம் கூடிய தோற்றத்தைப் பெறும். இந்த  பிளீச்சுமே கெமிக்கல் கலவையால் செய்யப்படுவது என்பதால் எல்லோருக்கும் பொருந்தாது. டைக்கு செய்யப்படுவது மாதிரியே பிளீச் செய்வதற்கு  முன்பும் கைகளில் அதைத் தடவி, பேட்ச் டெஸ்ட் செய்து பார்த்து, அரை மணி நேரம் காத்திருந்து, அலர்ஜி இல்லாவிட்டால் மட்டுமே உபயோகிக்க  வேண்டும்.

பிளீச், ஃபேஷியல் என எல்லாமே அவரவர் வீட்டி லேயே செய்துகொள்ள வசதியாக கடைகளில் கிடைக்கின்றன. அந்த பாக்கெட்டுகளின் மேல் எப்படிக்  கலப்பது, எப்படி உபயோகிப்பது என்கிற குறிப்புகள் இருக்கும். அந்தக் குறிப்புகள் எல்லா வகையான சருமத்துக்கும் பொதுவானவை. ஆனால், பிளீச்  என்பது ஒவ்வொரு வகை சருமத்தின் தன்மையைப் பார்த்து, அதற்கேற்ற அளவில் கலக்கப்பட்டு செய்யப்பட வேண்டியது. கலவை சற்று கூடினாலும்  சருமம் பாதிக்கப்படலாம். பெரும்பாலும் இந்த மாதிரி சிகிச்சைகளை பார்லர்களில் செய்து கொள்வதே பாதுகாப்பானது.

வாக்சிங் அலர்ஜி

வாக்சிங் செய்ததும் சிலருக்கு சருமத்தில் சிறிய தடிப்புகள், கொப்புளங்கள் வரலாம். சருமம் சிவந்து போகலாம். அது பெரும்பாலும் சில மணி  நேரங்களில் தானாக சரியாகிவிடும் என்பதால் கவலை வேண்டாம். அலர்ஜி உண்டானால் அந்த இடத்தில் கற்றாழை ஜெல் தடவுவது, ஐஸ் கட்டிகள்  வைத்துத் தேய்ப்பதன் மூலம் சரி செய்யலாம். ‘அப்படியெல்லாம் இல்லை... எப்போதுமே வாக்சிங் செய்தால் ஒத்துக் கொள்வதே இல்லை... ஆனால்,  கை, கால்களில் ரோமங்களுடன் இருக்கவும் முடியாது’ என்கிறவர்கள், சிகிச்சைக்கு முன் மருத்துவரைக் கலந்தாலோசித்து, அலர்ஜியை தவிர்க்கும்  மாத்திரையை எடுத்துக் கொள்ளலாம். பார்லர்களில் வாக்சிங் செய்கிற போது, சுத்தமான டவல் உபயோகித்ததும் தூக்கி எறிகிற டிஸ்போசபிள் வாக்ஸ்  ஷீட் உபயோகிக்கிறார்களா என்பதை சரி பார்க்கவும்.

இன்னும் சில அலர்ஜிகள்

ஒருவர் உபயோகித்த அழகு சாதனங்களை இன்னொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டாம். அலர்ஜியும் தொற்றுநோய்களும் இதனால் அதிகமாகப் பரவும்.

பெரிய கடைகள், ஷாப்பிங் மால்களில் அழகுசாதனங்கள் வாங்கச் சென்றால், ஒவ்வொரு நிறுவனமும் தமது பிராண்டை உபயோகித்துப் பார்க்கச்  சொல்லி, சாம்பிள் வைத்துக் கொண்டு அழைப்பார்கள். டெஸ்ட் செய்வதற்காக அவர்கள் கொடுக்கும் அந்தக் குறிப்பிட்ட அழகுசாதனம் ஏற்கனவே பலர்  உபயோகித்ததாக இருக்கும். அதை அடுத்தடுத்த நபர்கள் டெஸ்ட் செய்து பார்ப்பதன் மூலம் தொற்று சீக்கிரம் பரவும்.

சில வகை அழகுசாதனங்கள் காலாவதி ஆன பிறகு, நிறம், திடத்தன்மை மற்றும் மணத்தில் மாறும். உதாரணத்துக்கு லிப்ஸ்டிக் பழையதாகிப்  போனால், அதன் மேல் நீர்த்திவலைகள் மாதிரி தென்படும். லிக்விட் ஃபவுண்டேஷன் நீர்த்துப் போய் நிற்கும். சில வகை அழகு சாதனங்களோ எந்த  மாற்றத்தையும் காட்டாது. அது கெட்டுப் போனதைக் கண்டுபிடிக்க முடியாது. தயாரிப்புத் தேதியையும் இத்தனை காலத்துக்குள் உபயோகிக்க வேண்டும்  என்கிற தேதியையும் கவனித்து வாங்கி, உபயோகிப்பது மட்டுமே பாதுகாப்பானது. கூடிய வரை எந்த அழகுசாதனத்தையுமே ஒரு வருடத்துக்கு மேல்  வைத்திருந்து உபயோகிக்க வேண்டாம்!

0 comments:

Post a Comment