Sunday 2 March 2014

குழந்தை பெற்றுக் கொள்வதற்கு முன் கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

‘‘சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். அதைப் போல ஆரோக்கியம் இருந்தால்தான், ஆரோக்கியமான சந்ததியை உருவாக்க முடியும்.  திருமணத்துக்குப் பிறகு குழந்தைக்காக இயற்கையாகவோ, செயற்கையாகவோ முயற்சிகளை மேற்கொள்கிற பெண்கள், அதற்கு முன் சில  விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அது குழந்தைப் பிறப்பில் சிக்கல்களையும், தாமதத்தையும் தவிர்க்கும்’’ என்கிறார்  மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். குழந்தை பெற்றுக் கொள்ளும் ஆசையில் இருக்கும் பெண்களுக்கு அவர் சொல்லும் சில அறிவுரைகள் இங்கே...

‘‘முதலில் கவனிக்க வேண்டிய விஷயம் உங்கள் உடல் எடை. பி.எம்.ஐ எனப்படுகிற பாடி மாஸ் இன்டக்ஸை கணக்கிடுங்கள். அது 25க்கு மேல்  இருந்தால் ஓவர் வெயிட். 30க்கும் மேல் போனால் உடல் பருமன். உங்கள் பி.எம்.ஐ 25ஐத் தொட்டாலே நீங்கள் எச்சரிக்கையடைய  வேண்டும்.  உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறை மாற்றம் என சிலபல விஷயங்களால் சரியான எடைக்குத் திரும்ப வேண்டும்.அடுத்து உங்கள் மாதவிலக்கு சுழற்சி சரியாக இருக்கிறதா எனப் பாருங்கள். பிசிஓடி எனப்படுகிற சினைப்பை நீர்க்கட்டி பிரச்னை இருந்தால்  மாதவிலக்கு சுழற்சியும் முறையற்றுப் போகும்.

கருமுட்டை உற்பத்தியும் பாதிக்கும். அப்படியே உற்பத்தியானாலும் முட்டைகளின் தரம் மோசமாக இருக்கும். எனவே, மருத்துவரை சந்தித்து,  மாதவிலக்கு சுழற்சியை முறைப்படுத்த மாத்திரைகள் எடுத்துக் கொள்வதன் மூலம், முட்டைகளின் தரத்தையும் மேம்படுத்தலாம். கருத்தரிப்பதற்கு 6  மாதங்களுக்கு முன்பிருந்தே ஃபோலிக் அமிலம் உள்ள மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டியதும் அவசியம். அதே போல 6 மாதங்களுக்கு  முன்பே ருபெல்லா மற்றும் கர்ப்ப வாய் புற்று நோய்க்கு எதிரான தடுப்பூசிகள் போடப்பட வேண்டும்.

திருமணமாகி கருத்தரிக்காதவர்கள், மாதவிலக்கின் 2வது நாளில் எஃப்.எஸ்.ஹெச், எல்.ஹெச் மற்றும் ஏ.எம்.ஹெச் ஆகிய ஹார்மோன்களுக்கான  பரிசோதனை களை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக ஏ.எம்.ஹெச் சோதனையின் மூலம் சினைப்பையில் முட்டைகளின் இருப்பு  எப்படியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியும். முட்டைகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால் குழந்தையின்மைக்கான வேறு  சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த ஏ.எம்.ஹெச் குறைவாக இருந்தால் கருமுட்டை வெளிவராது.

அதுவே அதிகமானால் பிசிஓடி பிரச்னைக்கு வழி வகுக்கலாம். எனவே, அதைத் தெரிந்து கொண்டு சரியான சிகிச்சையை மேற்கொள்ள  வேண்டியிருக்கும். பிசிஓடி இருப்பது உறுதியானால் அதற்கு ஞிபிணிகிஷி என்கிற மாத்திரைகளை எடுத்துக் கொள்வதன் மூலம் கருமுட்டைகளின்  தரத்தை மேம்படுத்த முடியும். கருத்தரிக்க நினைக்கிற பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம் தைராய்டு. இந்தப்  பிரச்னை இருந்தால் குழந்தையின் அறிவுத்திறன் பாதிக்கும்.

சீக்கிரமே கருச்சிதைவு உண்டாகலாம். எனவே ,கருத்தரிக்கும் முன்பே தைராய்டு பிரச்னை இருக்கிறதா எனத் தெரிந்து கொண்டு, அதைக்  கட்டுப்பாட்டில் வைக்க மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சர்க்கரை மற்றும் ரத்த அழுத்த அளவுகளும் கருத்தரிக்கும் முன்பே கட்டுப்பாட்டுக்கு  வர வேண்டும். இந்த இரண்டும் கட்டுப்பாட்டை மீறிப் போகும் போது குழந்தையின் வளர்ச்சி பாதிக்கும்...’’ என்கிறார் மகப்பேறு மருத்துவர் மாலா ராஜ். 

0 comments:

Post a Comment